ஸ்வாகதா தன் போராட்டத்தில் வெல்லட்டும்: ஜேம்ஸ் வசந்தன்
ஸ்வாகதாவின் நேர்காணல் பேச்சுக்கு ஜேம்ஸ் வசந்தன் ஆதரவு...
பாடகி ஸ்வாகதா தனக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து பேசியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாடகி ஸ்வாகதா கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். பாடகியாக மட்டுமல்லாது இசையமைக்கவும், இசைக்குழுவை ஒருங்கிணைக்கவும் தெரிந்த கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையில் இவர் பாடிய, ‘ஆலாலிலோ’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சில நாள்களுக்கு முன் நேர்காணலில் பேசிய ஸ்வாகதா 7 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்தபோது பிரபல இசையமைப்பாளரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அதனை ரகசிய கேமராவில் எடுத்து மிரட்டியதாகவும் கூறினார். மேலும், இன்னும் அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஸ்வாகதா நேரடியாக அந்த இசையமைப்பாளர் யாரெனத் தெரியப்படுத்தவில்லை என்றாலும் பலரும் ஓர் இசையமைப்பாளரைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ஸ்வகதா 2012 ஆம் ஆண்டு என் தொலைக்காட்சி நிகழ்ச்சியான, "பாடவா டூயட் பாடலை" மூலம் அறிமுகமானார். எங்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர், எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாகிவிட்டார். அதன்பின், அவருடனான தொடர்பை இழந்தேன். இப்போது ஊடகங்களில் அவர் தன் கண்ணியத்தை பாதுகாத்து பேசுவதை பார்க்கிறேன். அவர் தனது போராட்டத்தில் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்.” எனக் கூறியுள்ளார்.
இதனைப் பகிர்ந்த ஸ்வாகதா, “நான் எப்போதும் உங்கள் குழந்தைதான் சார். உங்கள் ஆதரவுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.