இரண்டாம் யூனிட் இயக்குநராக பணியாற்றுவேன்... ராஜமௌலியை ஆச்சரியப்படுத்திய ஜேம்ஸ் கேமரூன்!
எஸ். எஸ். ராஜமௌலியை வியப்பில் ஆழ்த்திய ஜேம்ஸ் கேமரூன்..
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்குநர் ராஜமௌலியுடன் பணியாற்ற விரும்புவதாகக் கூறியுள்ளார்.
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவான அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் டிச. 19 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. இது அவதாரின் இறுதிப்பாகமாக இருக்கலாம் என்பதால் வணிக ரீதியாகவும் பல ஆயிரம் கோடிகளை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இணையம் வாயிலாக ஜேம்ஸ் கேமரூனுடன் உரையாடலை மேற்கொண்டார்.
அதில், “145 கோடி இந்தியர்கள் அவதார் - 3 திரைப்படத்தைப் பார்க்க ஒரே ஒரு காரணமாக ஜேம்ஸ் கேமரூனே இருக்கிறார். அவருக்கு என் நன்றி” என்றதும் அதனைக் கேட்ட ஜேம்ஸ் கேமரூன் மகிழ்ச்சியடைந்தார்.
மேலும், இணைப்பில் பேசிய ஜேம்ஸ் கேமரூன், “ராஜமௌலி நீங்கள் எடுத்துவரும் வாரணாசி திரைப்படத்தில் புலிகளுடன் ஜாலியான காட்சிகள் இருந்தால் சொல்லுங்கள் நான் கலந்துகொள்கிறேன். உங்கள் படப்பிடிப்புக்கு வருகிறேன். ஒரு கேமராவை கொடுங்கள். தோளில் சுமந்தபடி காட்சிகளை எடுப்பேன். என்னை உங்களுடைய இரண்டாம் யூனிட் இயக்குநர் என நினைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.
உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜேம்ஸ் கேமரூன் இயக்குநர் ராஜமௌலி படப்பிடிப்பில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!