எதிர்நீச்சல் - 2 தொடரில் மாற்றம்! அறிமுகமாகும் புதிய வில்லன்!
எதிர்நீச்சல் - 2 தொடரில் புதிய வில்லன் பாத்திரத்தில் அஷ்வின் தக்ஷின் அறிமுகமாகிறார்.
எதிர்நீச்சல் - 2 தொடரில் புதிய வில்லன் பாத்திரத்தில் நடிகரும் பின்னணிக் குரல் கொடுப்பவருமான அஷ்வின் தக்ஷின் இணைந்துள்ளார்.
ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு செல்லும் மருமகள்கள், புகுந்த வீட்டில் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
இந்தத் தொடரில் பார்வதி, ஸ்ரீஜா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, வேல ராமமூர்த்தி, விபு ராமன் உள்ளிட்டோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கதையின் படி, ஆதி குணசேகரனால் தாக்கப்படும் ஈஸ்வரி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார்.
3 ஆண்டுகள் சுயநினைவு இல்லாமல் இருக்கிறார் ஈஸ்வரி. இதனைத் தொடர்ந்து, ஈஸ்வரிக்கு சுயநினைவு திரும்பிய நிலையில், மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்புகிறார். ஆனால், 3 ஆண்டுகள் நடந்த ஏதுவும் அவருக்கு நினைவில்லை.
இந்தச் சூழலில், மாவட்ட ஆட்சியர் மதிவதனி, ஜனனியை செல்போன் மூலம் அழைத்து, கொடூமான வில்லன் ஒருவன் வரப்போவதாக எச்சரிக்கை விடுக்கிறார். அந்த வில்லன் பாத்திரத்தின் பெயர் ராவணன் ஆதிமுத்து.
எதிர்நீச்சல் - 2 தொடரில் ராவணன் ஆதிமுத்து பாத்திரத்தின் இணைந்துள்ளது தொடரில் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும் ஆதி குணசேகரன் பாத்திரத்துக்கு கடும் போட்டியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராவணன் ஆதிமுத்து பாத்திரத்தில் நடிப்பவர், நடிகரும் பின்னணிக் குரல் கொடுப்பவருமான அஷ்வின் தக்ஷின் இணைந்துள்ளார். இவரின் பாத்திரத்தில் கோலங்கள் தொடர் நடிகர் அஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஷ்வின் தக்ஷின் நடிக்கிறார்.
நடிகர் அஷ்வின் தக்ஷின் ஐந்தாம் வேதம் இணையத் தொடரில் நடித்து பிரபலமானவர். பல நடிகருக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.