ஒரு எதிர்காலம் எழுகிறது! வைரலாகும் விஜய் பாதுகாவலர் பதிவு!
விஜய்யின் பாதுகாவலர் பதிவு குறித்து...
தவெக தலைவர் விஜய்யின் பாதுகாவலர் பதிவு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
தேர்தல் பிரசாரங்கள் ஓய்ந்துவிட்டாலும் தமிழகத்தை ஆள்வது யார் என்கிற பரபரப்பு பேச்சுகளுக்கு பஞ்சமில்லை. சமூக வலைதளங்களில் கூட்டணி மற்றும் தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகளுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. சுவாரஸ்யமாக பல வேட்பாளர்கள் கவனம் பெற்றாலும் முதல்முறையாக பாதுகாவலர் ஒருவருக்கும் ரசிகர் படை உருவாகியிருக்கிறது.
அவர் தவெக தலைவர் விஜய்யின் பாதுகாவலர் நயீம் மூசா. கேரளத்தைச் சேர்ந்தவரான இவர் துபையில் பிரபலங்களுக்கான பாதுகாப்பு வழங்கல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அப்போதே, இவருக்கும் விஜய்க்கும் பழக்கம் ஏற்பட, தேர்தலை முன்னிட்டு விஜய்யின் முதன்மை பாதுகாவலராக நியமிக்கப்பட்டார்.
Advertisement
விஜய் எங்கு சென்றாலும் எப்படி நின்றாலும் அவருக்கும் பின் நயீம் கண்ணாடி அணிந்துகொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதுடன் விஜய்யின் வாகனத்தைத் துரத்தும் பல ஆயிரம் ரசிகர்களின் முகங்களைச் சுட்டிக்காட்ட, பரப்புரையில் விஜய்யை நோக்கி வரும் பொருள்களைப் பிடிக்க என விஜய்யை எந்தக் கோணத்தில் படம் பிடித்தாலும் மூசா இடம்பெற்று விடுவார்.
இதன் காரணமாகவே, விஜய்யின் ரசிகர்கள் பலரும் நயீம் மூசாவுக்கும் ரசிகர்களாகி விட்டனர். நயீம் - விஜய் பேசிச் சிரிக்கும் தருணங்களைக் காணொலி துணுக்குகளாக மாற்றி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களாக வெளியிட்டு பல லட்ச விருப்பங்களையும் பெறுகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (ஏப். 21) தேர்தல் பரப்புரையின் இறுதி நாளில் நயீம் தன் இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இன்று அண்ணனைக் கட்டியணைத்தேன். நாளை அவர் தமிழகத்தையே அணைப்பதைப் போன்ற உணர்வு இருந்தது. தடைகளைத் தாண்டி தன் வார்த்தைகளால் நேரடியாக மக்களைச் சென்றடைந்த தலைவர். இது வெறும் தருணம் அல்ல; ஒரு இயக்கம். ஒவ்வொரு வீதியிலிருந்து ஒவ்வொரு ஆன்மா வரை இந்த அன்பு உண்மையானது. இந்த உறவு உறுதியானது. ஒரு எதிர்காலமே எழுகிறது. தவெக தலைவர் விஜய்-காக 100 சதவீதம் தமிழ்நாடு தயாராகிவிட்டது.” எனக் கூறியுள்ளார்.
இப்பதிவைக் கண்ட விஜய் ரசிகர்கள் பலரும் நயீமுக்கு தங்கள் நன்றியைக் கூறி வருகின்றனர். மேலும், இப்பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.