முகப்பு
செய்திகள்

நயன்தாராவுக்கு ஆதரவாக சிவி சண்முகத்தைக் கண்டித்த தென்னிந்திய நடிகர் சங்கம்!

அதிமுக எம்பி சிவி சண்முகத்தைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை குறித்து...

Updated On : 17 மார்ச், 2026 at 2:46 PM
நயன்தாரா, நடிகர் சங்கம், சிவி சண்முகம்.
பகிர்:

அதிமுக மாநிலங்களவை எம்பி சிவி சண்முகத்தைக் கண்டித்து, நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது.

இரண்டு பக்க இந்த அறிக்கையில், “அரசியலில் கோலோச்சிய இந்திரா காந்தி அம்மையார் உங்கள் தலைவி ஜெயலலிதா அம்மையாரை விடவா உதாரணம் இருக்க முடியும்? அப்படி இருக்க, சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம். இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா?” எனக் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக ஆட்சியைக் கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அவர், “அப்துல் கலாம் அனைவரையும் கனவு காணுங்கள் எனக் கூறினார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேலேச் சென்று ’உங்கள் கனவைச் சொல்லுங்கள் நிறைவேற்றி வைக்கிறேன் என்கிறார். எனக்கு நயன்தாரா வேண்டும். நிறைவேற்றி வைப்பாரா? சிலர் நயன்தாராவைத் திருமணம் செய்துவை எனக் கேட்பார்கள். செய்து வைப்பாரா?” எனப் பேசினார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாடாளுமன்ற உறுப்பினர் திருவாளர் .சி.வி.சண்முகம் அவர்களுக்கு,

சமீபத்தில் தாங்கள் பேசிய மிகவும் கீழ்த்தரமான கேட்கவே கூக்கின்ற காணொளி எங்கள் பார்வைக்கு வந்தது தொடர்ந்து நடிகர் சமூகத்தின் கண்டனங்களும் கோபங்களும் கைப்பேசி வழியாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.

தேர்தல் களத்தில் கருத்து ரீதியாக, கொள்கை ரீதியாக கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், அடிப்படை கண்ணியத்தோடு, அதுவும் பொறுப்பில் இருக்கின்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டி இருக்கிறது. ஆனால், தாங்கள் சபை நாகரீகத்தை விட்டொழித்து ஒலிபெருக்கி மூலமாக எங்கள் சகோதரி நயன்தாராவை உட்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஐயா அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். சரி மக்கள் காண்கின்ற கனவை நினைவாக்கித் தர அண்டை நாட்டிடமா கேட்க முடியும். மக்களின் கனவு என்பது, ஒரு ஏழையின் கூரையாக இருக்கிறது. விவசாயி மகனின் கல்வியாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் பெண்ணின் வேலை வாய்ப்பாக இருக்கிறது. தொழிலதிபர்களின் உள்கட்டமைப்பாக இருக்கிறது. எல்லை காக்கும் ராணுவ வீரனுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால், தங்கள் கனவு என்னவாக இருக்கிறது என்று வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாக பேசியதற்கு பாராட்டவா முடியும்?

இது பெண்களின் யுகம். அவர்கள் இல்லாத துறையே இல்லை. வான் கிழிக்கும் ராக்கெட்டில் இருந்து மருத்துவராக, ஆசிரியராக, வழக்கறிஞராக பெரும் இயந்திரங்களை இயக்குபவர்களாக, பேருந்து ஓட்டும் பெண்களை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது.

அரசியலில் கோலோச்சிய இந்திரா காந்தி அம்மையார் உங்கள் தலைவி ஜெயலலிதா அம்மையாரை விடவா உதாரணம் இருக்க முடியும்? அப்படி இருக்க, சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம். இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா? தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது அவர்கள் ஆமோதிக்கிறார்களா? தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற மரியாதை இன்னும் இருக்கிறது என்ற காரணத்தினால் நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் கேட்கிறோம். தங்களிடமிருந்து மன்னிப்பும் இனி எங்கள் துறை சார்ந்த பெண் திறன்களை மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்கின்ற உத்தரவாதமும்.... தென்னிந்திய நடிகர் சங்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

South Indian Actors' Association issues statement in support of Nayanthara, condemning CV Shanmugam!

முழு கட்டுரையைப் படிக்க →