50 ஆண்டுகளை நிறைவு செய்த இளையராஜா!
அன்னக்கிளி வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவு...
இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகமான அன்னக்கிளி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு.
இந்திய திரையிசையின் போக்கை மாற்றிய இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜா சரியாக இதே நாளில்தான் 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம், ‘மச்சானைப் பார்த்தீங்களா?’ என தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
யாரோ இளம் இசையமைப்பாளர் என்றில்லாமல் யார், யாரோ அவரது இசைக்காக காத்திருக்கும் நிலையை அடுத்த சில ஆண்டுகளிலேயே உருவாக்கியவர், இன்றும் தமிழில் படைப்பாற்றால் மிக்க கலைஞர்கள் வரிசையில் கம்பீரமாக முதலிடத்தில் அமர்ந்திருக்கிறார்.
Advertisement
Advertisement
தமிழில் எண்ணற்ற பாடல்கள் உருவாகியிருந்தாலும் எங்கும் ஒலிக்கும் பல பாடல்களைக் கொடுத்தவர் இளையராஜா. இன்றைய கால திரைப்படங்களில்கூட ராஜாவின் பழைய பாடல்களைப் பயன்படுத்தாமல்m ’நாஸ்டால்ஜியா’ உணர்வைக் கொடுக்க முடிவதில்லை.
இசையில் மட்டுமல்லாது தன் குரலாலும் பல அபாரமான பாடல்களைப் பாடியவருக்கு, 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற, ‘சோளம் விதைக்கயிலே..’ பாடல்தான் முதல் பாடல். இளையராஜா இதுவரை 400 பாடல்கள் வரை பாடியிருக்கிறார். இத்தனை பாடல்களையும் கேட்ட ராஜா ரசிகர் யாரெனும் உண்டா? ஆச்சரியமாக இசையமைக்க வந்த சில ஆண்டுகளிலேயே, ‘நிழல்கள்’ படத்தில் மடை திறந்து பாடலில் நடிக்கவும் செய்தார். ஆனால், அது பெரிதாக தொடரவில்லை. இடைவெளி விட்டு, இதுவரை 10 படங்கள் வரை சிறப்பு தோற்றத்தில் ஓரிரு நிமிடங்கள் நடித்திருக்கிறார்.
தான் தேர்ந்தெடுத்த கலையைச் செயலாற்றலுடன் கூடிய ஒழுக்கத்துடன் கட்டியெழுப்பிய இளையராஜா, இந்த 50 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்... 8500க்கும் அதிகமான பாடல்கள்... பல தேசிய விருதுகள், உலக அங்கீகாரங்கள், ஆசியாவிலேயே சிம்பொனி எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என இசைத்துறையில் ஒப்பற்ற கலைஞர் என்கிற அடையாளத்துடன் உள்ளார். இன்னும் பல ஆண்டுகள் அவர் இசைகளைப் படைக்க வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்!
Today marks the completion of 50 years since the release of the film Annakili, which marked the debut of music composer Ilaiyaraaja.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.