கருப்பு வெளியாகுமா? ஆகாதா? தயாரிப்பாளரைத் தாக்கும் ரசிகர்கள்!
கருப்பு வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது...
நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் சிக்கலைச் சந்தித்துள்ளது.
நடிகர் சூர்யாவுக்கு போதாது காலம் போல் தெரிகிறது. சூரரைப் போற்று, ஜெய்பீம் ஆகிய நல்ல படங்கள் ஓடிடியில் வெளியாகின. திரையரங்குகளில் வெளியான கங்குவா, ரெட்ரோ ஆகியவை கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தன. திரையரங்க வெளியீட்டில் சூர்யாவுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமென நீண்ட காலமாக அவரது ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
இந்தச் சூழலில்தான் ஆர்ஜே பாலாஜியுடனான கருப்பு திரைப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் உள்ளிட்டவை பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. கண்டிப்பாக, வெற்றிப்படமாக அமையும் என கடந்த 6 மாதங்களாக இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தால்... காத்திருந்தால்... காத்திருங்கள் என்றே ஒவ்வொரு முறையும் பதில் வந்து கொண்டிருக்கிறது.
Advertisement
Advertisement
இன்று வெளியாக இருந்த கருப்பு திரைப்படத்தின் காலை 9 மணி முதல்காட்சியை ரத்து செய்திருக்கிறார்கள். காரணம், தயாரிப்பு தரப்பினருக்கும் விநியோகிஸ்தர்கள் இடையேயான கடந்த கால நிதிப்பிரச்னை. இதனை முதலிலேயே தயாரிப்பாளர் சரி செய்யாததால், வெளியீட்டன்று ரத்து செய்யும் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர்.
கருப்பு திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு பல திரைப்படங்களைத் திறம்படத் தயாரித்து வெற்றி பெற்ற தயாரிப்பாளர்தான் என்றாலும் கருப்பு விஷயத்தில் சிக்கிக்கொண்டார் போல. ஆனால், ரசிகர்களுக்கு அதெல்லாம் தேவையா என்ன?
இன்று அதிகாலை எஸ். ஆர். பிரபு தன் எக்ஸ் கணக்கிலிருந்து, ”தவிர்க்க முடியாத காரணங்களால் காலை 9 மணி காட்சிகள் ரத்தாகின்றன. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்றார். அப்போதிலிருந்து இப்போது வரை சூர்யா ரசிகர்கள் எஸ். ஆர். பிரபுவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தனிப்பட்ட முறையிலும் தகாத வார்த்தைகளால் அவரைத் தாக்கி வருவதுடன் படத்தைப் புறக்கணிக்க வேண்டுமென்றும் கூறி வருகின்றனர்.
பலரும் வேலைக்கு விடுப்பு எடுத்து முதல்காட்சியைப் பார்க்க ஆவலாக இருந்ததாகத் தங்கள் வேதனையைப் பதிவிட்டுள்ளனர்.
மேலும், நடிகர் சூர்யா இனிமேல் ஸ்டூடியோ கிரீன் (ஞானவேல் ராஜா), ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் (எஸ். ஆர். பிரபு) ஆகியோர் தயாரிப்பில் நடிக்கக் கூடாது என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
இதற்கிடையே, பிரச்னையைச் சரி செய்ய நடிகர் சூர்யா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் என்றும் இன்று கருப்பு வெளியாகிவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன!
Actor Suriya's film Karuppu has encountered difficulties, despite being scheduled for release today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.