பாதுகாப்பு காரணம்! பிரபல அமெரிக்க பாடகரின் இந்திய பயணம் ரத்து!
அமெரிக்க பாடகர் கன்யா வெஸ்ட்டின் இந்திய இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது...
பிரபல அமெரிக்க பாடகர் கன்யா வெஸ்ட்டின் இந்திய இசை நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக பிரபல அமெரிக்க பாடகர் கன்யா வெஸ்ட்டின் இசை நிகழ்ச்சி வரும் மே 23 அன்று நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், இந்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, தில்லியில் நடைபெறவிருந்த கன்யா வெஸ்ட்டின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, இன்று (மே 15) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதுபற்றி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,
“பங்கேற்பாளர்கள் மற்றும் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தில்லியில் வரும் மே 23 ஆம் தேதி நடைபெறவிருந்த நாட்டின் மிகப் பெரிய இசை நிகழ்ச்சியான கன்யா வெஸ்ட்டின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகின்றது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கன்யா வெஸ்ட்டின் தில்லி இசை நிகழ்ச்சி மே 29 அன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், புவிசார் அரசியல் சூழலும், பிராந்திய பதற்றங்களும் நிலவி வருவதால் முன்கூட்டியே மே 23 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.