இதற்குக் காரணம் என் உதவியாளர்தான்... சூர்யா பகிர்ந்த சுவாரஸ்யம்!
சூர்யா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்...
நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சூர்யாவின் திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படமாக கருப்பு மாறியுள்ளது. மே 15 ஆம் தேதி வெளியான இப்படம் இன்று வரை பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அரங்கம் நிறைந்தபடியே இருப்பதால் இந்தாண்டின் அதிகம் வசூலித்த வெற்றிப்படங்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ரூ. 230 கோடி வரை வசூலித்த இப்படம் இந்த வார இறுதிக்குள் கூடுதல் வசூலைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் வெற்றிக்காக நடிகர் சூர்யா பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார்.
Advertisement
Advertisement
நிகழ்வில், பேசிய சூர்யா, "இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரை மணி நேரத்தில் ஒப்புக்கொண்ட திரைப்படம் இது. அவ்வளவு சீக்கிரமாக எதுவும் நடக்காது என்றாலும் அன்று ஏதோ சரியாக இருந்தது போல் இருந்தது. எதிர்பார்க்காத இந்த பெரிய வெற்றிக்கு அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். 22 ஆண்டுகளாக என் உதவியாளராக இருக்கும் குமார், கருப்புசாமிக்கு ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என என்னிடம் கூறினார். அதுவரை அப்பாடல் படத்தில் இல்லை. எடிட்டிங்கும் முடிந்துவிட்டது.
ஆனால், அப்படியொரு பாடல் இருந்தால் நன்றாகத்தான் இருக்குமென நினைத்து படப்பிடிப்பு முடிந்து 5 மாதங்கள் கழித்து அப்பாடலை மட்டும் படமாக்கினோம். கிளைமேக்ஸில் நீங்கள் பார்த்த அந்த கருப்பு பாடலுக்கு யோசனை கொடுத்தது என் உதவியாளர்தான்” எனக் கூறினார். அப்பாடலால் பலரும் சாமியாடிய விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதால் அதிகளவில் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.