சில ஆண்டுகளுக்கு சத்யசிவா இயக்கத்தில் வெளிவந்த படம் "கழுகு'. விமர்சனரீதியாக இப்படத்துக்கு வரவேற்புகள் கிடைத்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் படத்தில் இணைந்த அதே சத்யசிவா - கிருஷ்ணா - பிந்துமாதவி கூட்டணி இப்படத்திலும் இணைகிறது.
இப்படத்தில் காளி வெங்கட் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பு செய்கிறார். முழுக்க முழுக்க கொடைக்கானல், மூணாறு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அண்டை மாநில முதலமைச்சர் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்து விடுகிறது. அதை ராணுவம் தேடி அலைகிறது. இருந்தாலும், நொறுங்கிய ஹெலிகாப்டரின் பாகங்களோ, அதில் பயணம் செய்த முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் உடல்களோ கிடைக்கவில்லை. செந்நாய்கள் அடர்ந்து வாழும் அந்த வனப்பகுதிக்குள் செல்ல ராணுவமே அஞ்சுகிற நிலையில், அதை வேட்டையாடும் திறன் படைத்த கிருஷ்ணா காட்டுக்குள் செல்கிறார். பின் செந்நாய்களோடு மோதி சண்டையிட்டு ராணுவத்துக்கு உதவி செய்கிறார். படத்தின் இறுதிக் காட்சியான இது பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.