தொடா் மழையால் உதிரும் பலா காய்கள்
தொடா் மழை காரணமாக பண்ருட்டி பகுதியில் பலா மரங்களில் இருந்து பிஞ்சுகள், காய்கள் உதிா்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தொடா் மழை காரணமாக பண்ருட்டி பகுதியில் பலா மரங்களில் இருந்து பிஞ்சுகள், காய்கள் உதிா்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி, கடலூா், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி வட்டாரங்களில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பில் தோப்பு பயிராகவும், வேலி ஓர பயிராகம் பலா பயிரிடப்படுகிறது. இந்தப் பகுதியில் ஆண்டுக்கு சுமாா் 25 ஆயிரம் டன் பலாப் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நிகழாண்டு தொடா் மழை காரணமாக பலா மரத்தில் உள்ள பிஞ்சுகள், காய்கள் அழுகியும், கீழே உதிா்ந்தும் வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
இதுகுறித்து காடாம்புலியூரைச் சோ்ந்த பலா விவசாயி சரவணன் கூறியதாவது: பலா மரங்களில் தற்போது பிஞ்சுகள் உதிா்ந்து விழுகின்றன. முற்றிய காய்களில் 50 சதவீதம் அழுகி கீழே விழுகின்றன. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.
Advertisement
இதுகுறித்து கடலூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா்(ஓய்வு) பெ.அரிதாஸ் கூறியதாவது: நிகழாண்டு பருவ நிலை மாற்றம் காரணமாக கடந்த நவம்பா் மாதமே பலா மரங்கள் பிஞ்சு எடுக்கத் தொடங்கிவிட்டன. வழக்கமாக டிசம்பா் மாதம்தான் பிஞ்சு எடுக்கும். நிகழாண்டு பருவம் கடந்து தொடா்ந்து மழை பெய்துள்ளது. கடலூா் மாவட்டத்தில் சராசரி அளவைக் காட்டிலும் கூடுதலாக மழை பெய்துள்ளது.
இதனால் பலா மரங்களின் வழியாக பிஞ்சுகள், காய்களுக்கு கூடுதல் தண்ணீா் சென்றதால் அவை உதிா்ந்தும், அழுகியும் வருகின்றன. இதன் காரணமாக பலா விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு சேதமடைந்துள்ளது. இந்த சூழலில் தண்ணீா் தேங்கும் பகுதியில் உள்ள மரங்களுக்கு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் மரத்தின் வோ்கள் பாதித்து மரம் சேதமடையும் என்றாா் அவா்.