கட்டுரைகள்

"செல்' இன்றிச் செல்!

பணியின்போது அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது. ÷சாலை விபத்துக்கான முக்கிய காரணிகளில் செல்போனும் ஒன்று. சாலைகளில் ம

எஸ். ராஜாராம்

பணியின்போது அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது.

÷சாலை விபத்துக்கான முக்கிய காரணிகளில் செல்போனும் ஒன்று. சாலைகளில் மட்டுமல்ல, தண்டவாளத்தைக் கடக்கும்போதுகூட செல்போன் பேசும் அளவு நம் மக்களை அடிமைப்படுத்தியுள்ளது செல்போன். ஆதலால் இந்தத் தடை நிச்சயம் பலனளிக்கும்.

÷அதேநேரத்தில், செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிப்பது ஓட்டுநர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்; பணியின்போது செல்போன் பேச வேண்டுமானால் தடை விதிக்கலாம்; செல்போனே எடுத்துச் செல்லத் தடை விதிக்கக் கூடாது என சில போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதில் சமரசத்துக்கு இடம் அளித்தால் இந்த உத்தரவே நீர்த்துப்போகும்.

÷போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பேச செல்போன் அவசியம் என்று கருதினால், நடத்துநர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களுடன் ஓட்டுநர்கள் தொடர்புகொள்ள செல்போன் அவசியம் என்று வாதிடுவது நியாயமல்ல. அரசு சட்டம் இயற்றினால் அதில் சலுகைகளை எதிர்பார்க்கக் கூடாது.

÷செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே விதிமுறைகள் உள்ளன. ஆனால், அதன்படி எடுக்கப்படும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. எல்லா சாலைகளிலும் யாராவது சிலர் செல்போன் பேசிக்கொண்டேதான் வாகனத்தை இயக்குகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்தான் எப்போதாவது போலீஸ் பிடியில் சிக்குகின்றனர். செல்போன் பேசிக்கொண்டே கார்களை இயக்கும் ஓட்டுநர்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.

÷பொது இடத்தில் புகைபிடிக்க, எச்சில் துப்பத் தடைவிதித்து அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு எந்த அளவு நடைமுறையில் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. தொடர்ச்சியான கண்காணிப்பு, கடுமையான நடவடிக்கைகள் இல்லாததே அரசின் சட்டங்கள் மீறப்படுவதற்கு முதற்காரணம்.

÷அதேபோன்ற நிலைமை இந்த விஷயத்திலும் ஆகிவிடாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் செல்போன் கொண்டு செல்கின்றனரா என்பது டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விதிவிலக்கும் அளிக்காமல் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

÷மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் என்பதுடன் நின்றுவிடாமல், தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களும் செல்போன் எடுத்துச் செல்லத் தடைவிதிக்க வேண்டும்.

÷தனியார் பேருந்துகள் சிறப்பான சேவையை அளித்தாலும், அதிக வேகம், தொழில்போட்டியால் விதிமீறல் என அவைகளால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகவே உள்ளன. எனவே, இந்தக் கண்காணிப்பு வளையத்துக்குள் தனியார் பேருந்து ஓட்டுநர்களும் கொண்டுவரப்பட வேண்டும்.

÷அதேபோல அரசு அலுவலகங்களிலும் பணியின்போது ஊழியர்கள் செல்போன் பேச சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பலர், காத்துக்கிடக்கும் பொதுமக்களைக் கண்டுகொள்ளாமல் செல்போனில் வெட்டியாகப் பேசி அரட்டை அடிப்பது கண்கூடு. இதனால், பணிகள் பாதிக்கப்படுவதுடன் ஏதாவது ஒரு காரணத்துக்காக அலுவலகங்களுக்கு வந்திருக்கும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

÷அறிவியல் முன்னேற்றத்தின் அற்புதம் செல்போன். அதன் வருகைக்குப் பின்னர் தகவல் தொடர்பில் பெரும் புரட்சியே ஏற்பட்டு, இன்று "செல் இல்லாதோர்க்கு இவ்வுலக வாழ்க்கையே இல்லை' என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், அந்த நாகரிகப் புரட்சியே தனிமனித வாழ்வில் ஒரு மிரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை. செல்போனால் எந்த அளவு பயன் உள்ளதோ அதே அளவு பாதிப்புகளும் இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பதால், அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. செல்போனால், மாணவிகளுக்குப் பல்வேறு மனஉளைச்சல்கள் ஏற்படுகின்றன. உச்சகட்டமாக, ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கிக்கொண்டே செல்போன் பேசுவதால் விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

÷எனவே, செல்போன் பயன்பாட்டில் நிச்சயம் கட்டுப்பாடுகள் தேவை. அரசு சட்டம் போட்டுத்தான் அந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்பதில்லை. ஏனெனில் என்னதான் சட்டம் இயற்றினாலும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற தனிமனித ஒழுக்கமே எந்த சட்டத்தையும் வெற்றி பெறச் செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT