கட்டுரைகள்

வேடம் கலைகிறது...!

பாகிஸ்தான் - அமெரிக்கா இடையிலான தேனிலவுக் காலம் முடிவுக்கு வந்துவிடும் தோற்றத்தை இப்போதைய சூழ்நிலைகள் ஏற்படுத்தியுள்ளன. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் நேட்டோ விமானங்கள் நடத்திய

எஸ். ராஜாராம்

பாகிஸ்தான் - அமெரிக்கா இடையிலான தேனிலவுக் காலம் முடிவுக்கு வந்துவிடும் தோற்றத்தை இப்போதைய சூழ்நிலைகள் ஏற்படுத்தியுள்ளன. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டதே பிரச்னைக்குக் காரணம்.

 இந்தச் சம்பவம் நாட்டில் ஏற்படுத்திய கொந்தளிப்பால், அமெரிக்காவைக் கண்டித்தே ஆகவேண்டிய நிர்பந்தம் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

 "ஷாம்சி விமானதளத்தில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும், இனி ஒருமுறை தாக்குதல் நடந்தால் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்காமல் பாகிஸ்தான் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்த வேண்டும்' என ராணுவத் தளபதி கயானி ஆவேசப்பட்டார்.

 அமெரிக்க அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, "நேட்டோ தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டது அல்ல' என்று விளக்கம் அளித்தார்.

 அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானியைத் தொடர்புகொண்டு, "பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா எப்போதுமே மதிக்கிறது' என்று சமாதானம் சொன்னார். ஆனால், எந்த சமரசத்தையும் ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான், தங்களது கண்டனத்தை உலகுக்குத் தெரிவிக்கும் வகையில், ஜெர்மனியில் நடைபெறும் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்துவிட்டது.

 அமெரிக்காவுடனான உறவில் இப்படி ஒரு விரிசல் என்றாவது ஏற்படும் என்பது பாகிஸ்தான் எதிர்பார்த்ததுதான். ஆனால், இத்தனை விரைவில் உறவு சீர்கெடும் என்பதுதான் எதிர்பார்க்காதது. இஸ்லாமிய நாடுகளைக் குறிவைக்கிறது அமெரிக்கா என்ற நீண்டநாளைய குற்றச்சாட்டுக்கு இடையே, அமெரிக்காவை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் வேண்டுமானால் ஏற்கலாம். ஆனால், பாகிஸ்தான் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

 அமெரிக்காவுக்கு அதிகம் இடம்கொடுக்கிறோம் என்று பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ அந்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது.

 ஆதலால்தான் பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்கப் படைகள் காலூன்றிய நாள்முதல் இன்றுவரை நாள்தோறும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், சொந்த நாட்டு மக்கள் மட்டுமன்றி, அமெரிக்காவிடமுமே பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இரட்டைவேடம்தான் போட்டு வருகிறார்கள்.

 அமெரிக்காவுடன் சேர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறும் பாகிஸ்தானின் குட்டு, பின்லேடன் கொல்லப்பட்ட விஷயத்திலேயே அம்பலமாகிவிட்டது.

 பின்லேடன் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்கிறார் என்பது தெரிந்ததும், பெரிய அளவில் உணர்ச்சிவசப்பட்டு பாகிஸ்தானைக் கண்டிக்கும் வேலையையெல்லாம் செய்யாமல், பின்லேடனை அமெரிக்க வீரர்கள் தேடிச்சென்று கொன்றபோதுதான் அமெரிக்காவின் உண்மை முகம் பாகிஸ்தானுக்குத் தெரிந்திருக்கும்.

 தலிபான்களை அழிப்பதற்காக உதவிபுரியும் முக்கிய தளமாகவும், பின்லேடனை அழிப்பதற்காகவும்தான் பாகிஸ்தானை அமெரிக்கா இத்தனைக் காலம் பயன்படுத்தி வந்தது. அதற்காகத்தான் நிதியுதவிகளை வாரி வழங்கியது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலின்போதும், பாகிஸ்தானுக்கு வலிக்காத வகையில் கண்டித்து வந்தது.

 குறிவைத்தபடி பின்லேடனை அழித்தாயிற்று. ஆப்கானிஸ்தானிலும் தலிபான்களை ஒடுக்கி, அந்த நாட்டின் எதிர்காலம் குறித்துப் பேசும் அளவுக்கு நிலைமை சீரடைந்துவிட்டது.

 இனியும் பாகிஸ்தானை அனுசரித்துப்போக வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு இல்லை. அந்த அலட்சியம்கூட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும்.

 ஏற்கெனவே, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கையில் சிக்கும் அபாயம் உள்ளது என்று சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. மீண்டும் அங்கு ராணுவப் புரட்சி ஏற்படும் அபாயத்தையும் மறுப்பதற்கில்லை.

 அமெரிக்காவுடனான உறவு என்பது புலிவாலை பிடித்த கதை. இச்சூழ்நிலையில், அந்த உறவைத் தொடர வேண்டுமா என்ற முடிவை எடுக்க வேண்டிய இக்கட்டான தருணத்தில் இருக்கிறது பாகிஸ்தான்.

 இது வேடம் கலையும் நேரம்... பாகிஸ்தான், அமெரிக்கா இரு நாடுகளின் வேடமும்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT