கட்டுரைகள்

சுகாதார ஆலோசனைக்கு "104'

ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைபெறச் சென்றால் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. சற்று தாமதமாகச் சென்றால், சில நாள்களில் மருத்துவர் இருப்பதில்லை. சில நாள்களில் மருத்துவர், பயிற்சிக்குச் சென்றுவிடுவார்.

கே.சுப்பிரமணியன்

ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைபெறச் சென்றால் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. சற்று தாமதமாகச் சென்றால், சில நாள்களில் மருத்துவர் இருப்பதில்லை. சில நாள்களில் மருத்துவர், பயிற்சிக்குச் சென்றுவிடுவார்.

மருந்தாளுநர் அல்லது செவிலியர்களிடம் நோயாளிகள் மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சை பெற்றுச் செல்வர். இதுதான் தமிழக ஆரம்பச் சுகாதார நிலையங்களின் இன்றைய நிலை.

கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில், சாதாரண சிகிச்சைகளை மேற்கொள்ள, "ஆயுஷ்' மருத்துவர்களே போதும், எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள் தேவையில்லை என்று ஒரு சாராரும், எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாற்றாக, 3 ஆண்டு மருத்துவப் பட்டயப் படிப்பை கொண்டுவந்து, அந்தப் படிப்பு முடித்தவர்களை ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மருத்துவர்களாகப் பணியமர்த்தலாம் என்று ஒரு தரப்பினரும் பேசி வருகின்றனர். இதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்துச் செயல்படுத்துவதற்கு இன்னும் பல மாதங்கள் பிடிக்கக்கூடும்.

இந்த நிலையில், தமிழக அரசு கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், கோரிக்கை எண் 9-இல், ஏழை எளிய மக்கள் இலவசமாக சுகாதாரம் குறித்த ஆலோசனைகளைப் பெற உதவிடும் வகையில், "104' என்ற இலவச, சுகாதாரத் தகவல் அளிக்கும் தொலைபேசி சேவை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. இதற்கானப் பணிகளை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை செய்து வருகிறது.

இந்தத் திட்டத்தை, "அரசு - தனியார் பங்களிப்பு' முறையில் ஏற்கெனவே தமிழகத்தில் "108 ஆம்புலன்ஸ்' திட்டத்தைச் செயல்படுத்திவரும் "ஜிவிகே - இஎம்ஆர்ஐ' உடன் சேர்ந்து விரையில் அமல்படுத்தவுள்ளனர்.

"104' என்ற எண்ணை டயல் செய்தால், இந்தச் சேவை கிடைக்கும் வகையில், இதற்கான அனுமதியை "பிஎஸ்என்எல்' நிறுவனம் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. இதை அந்த நிறுவன அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்கள், தரைவழித் தொலைபேசி அல்லது "கைபேசி' மூலமாக, "104' என்ற எண்ணுக்கு இலவசமாகத் தொடர்புகொண்டு மருத்துவ ஆலோசனைகள், இருமல், காய்ச்சல், சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை விவரங்கள், குறிப்பிட்ட நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், குறிப்பிட்ட நோய் தொடர்பாக சோதனை செய்யும் மையங்கள், எச்.ஐ.வி. பாதிப்பு, மது மற்றும் புகைப்பழக்கத்திலிருந்து மீள்வோருக்கான ஆற்றுப்படுத்துதல் வசதி உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம்.

இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை. இது ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள சிகிச்சைக் குறைபாடுகளுக்கு சிறந்த தீர்வாக அமையும். இந்தச் சேவை மூலம், அவசரச் சிகிச்சை அல்லாத நோய்களுக்கு மட்டுமே ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த சேவை முதன்முதலில் எச்.எம்.ஆர்.ஐ. என்ற நிறுவனம், ஆந்திர மாநில அரசுடன் இணைந்து அந்த மாநிலத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு, பிப்ரவரியில் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து அசாம் (நவம்பர் 2010), ராஜஸ்தான் (நவம்பர் 2011), மகாராஷ்டிரம் (ஜனவரி 2012), கர்நாடகம் (ஜூன் 2013) ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, 6-ஆவது மாநிலமாக, தமிழகத்தில் விரைவில் இந்தச் சேவை "ஜி.வி.கே. - இ.எம்.ஆர்.ஐ.' நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.

இது தமிழகத்தில் வாழும் ஏழை எளியோர், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும். இந்தச் சேவை தமிழகத்துக்கு வருவதன் மூலம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தமிழக மக்களும் பயன்பெறுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT