முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

பிரத்யேக கழிப்பிடங்கள் கோரும் மாற்றுத்திறனாளிகள்

சென்னை: பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையிலான பிரத்யேகக் கழிப்பிடங்களை அரசு ஏற்படுத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பொது இடங்களி

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:46 PM
பகிர்:

சென்னை: பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையிலான பிரத்யேகக் கழிப்பிடங்களை அரசு ஏற்படுத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் கழிப்பிடங்களே உள்ளன. அவையும் போதிய பராமரிப்பின்றி சுகாதாரமற்று இருக்கின்றன. பல பொதுக் கழிப்பிடங்கள் மக்கள் பலரும் கால் வைக்க அச்சப்படும் அளவுக்கு அசுத்தமாக உள்ளன. இதுபோன்ற அசுத்தமான கழிப்பிடங்களில் மாற்றுத் திறனாளிகள் பலரும் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக கால்கள் செயலற்று இருக்கும் மாற்றுத்திறனாளிகள் இத்தகைய பொதுக் கழிப்பிடங்களை மிக வேதனையுடனே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் பெண் மாற்றுத்திறனாளிகள் படும் துன்பங்கள் மிகவும் வேதனைக்குரியது.

இது குறித்து மாரிமுத்து (மாற்றுத்திறனாளி) கூறியதாவது: என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருக்கும் வரை இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், நாங்கள் வெளியே எங்காவது சென்றால் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறோம். சுகாதாரமற்று இருக்கும் பொதுக் கழிப்பிடங்கள் என்னைப் போன்றவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இல்லை. மேலும், இது போன்ற அசுத்தமான கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதால் எங்களுக்குத் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. பல தனியார் வணிக வளாகங்களிலும், திரையரங்குகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்ற கழிப்பிடங்களை பொது இடங்களில் அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என்றார் அவர்.

Advertisement

கங்கா (மாற்றுத்திறனாளி): பெண் மாற்றுத்திறனாளிகள் மாதவிடாய் நாட்களில் வெளியூர்களுக்கு செல்லும்போது, சுகாதாரமற்ற கழிப்பிடங்களின் காரணமாக பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வசதி வாய்ப்புகள் உள்ள பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு குடும்ப உறுப்பினர்கள் உதவுவதன் மூலம் இது போன்ற பிரச்னைகளை எளிதாகச் சமாளிக்கின்றனர். ஆனால், சாலையோரமே தங்களது வாழ்கையை நகர்த்தும் பெண் மாற்றுத் திறனாளிகள், பெரும்பாலும் பொது கழிப்பிடங்களையே நம்பியுள்ளனர். இவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அரசு பிரத்யேக கழிப்பிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.

இது குறித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில செயலர் எஸ்.நம்புராஜன் கூறியதாவது: மக்கள் கூடும் இடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையிலான "வெஸ்டர்ன்' முறை கழிப்பிடங்கள் அரசு உருவாக்க வேண்டும். மேலும், அந்த கழிப்பிடங்களின் உள்ளே செல்ல வசதியாக சாய்வுத் தளங்களையும் ஏற்படுத்த வேண்டும்.

பெரும்பான்மையான மாற்றுத்திறனாளிகள் வறுமை கோட்டுக்கும் கீழே உள்ளதால் பிரத்யேக கழிப்பிடங்களை அரசு உருவாக்கி அதனை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும். பொது இடங்களில் மட்டுமின்ற அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் பிரத்யேக கழிப்பிடங்கள் உருவாக்கப்படுகிறதா என்று அரசு கண்காணிக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments