FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மூளைச்சாவு அடைந்த காதல் கணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்த மனைவி!

உலகளவில் மறைந்தாலும், உடல் உறுப்பு மூலமாக எனது கணவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிறார் லாரி ஓட்டுநர் செல்வராஜூ மனைவி சுபத்ரா தேவி.

28 ஜனவரி 2024, 11:03 am IST
கணவர் செல்வராஜ் மற்றும் குழந்தைகளுடன் சுபத்ரா தேவி.
பகிர்:

உலகளவில் மறைந்தாலும், உடல் உறுப்பு மூலமாக எனது கணவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிறார் லாரி ஓட்டுநர் செல்வராஜூ மனைவி சுபத்ரா தேவி.

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த காலகட்டத்தில் மருத்துவமனைகளில் சாதாரண நோய்க்குக் கூட சிகிச்சை பெறுவது என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.  மருத்துவர்கள் மத்தியிலும் இதற்கான தாக்கம் என்பது இல்லாமல் இல்லை. இந்த காலகட்டத்தில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த  சமயபுரம் சோழன்நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வராஜ்(47) உடல் உறுப்புகளை தானமாக வழங்கி தமிழக அரசின் பாராட்டைப் பெற்றார் அவரது மனைவி சுபத்ரா தேவி.

இந்த உடல் உறுப்புகள் தானத்திற்கு தனது மகன் அசோக்ராஜ்(19), மகள் கங்காஷர்மி(17) அளித்த ஊக்கமே என்கிறார் சுபத்ரா தேவி.

Advertisement

Advertisement

மேலும், அவர் கூறுகையில், இரு தரப்பு பெற்றோர் எதிர்ப்பையும் மீறி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆரம்ப காலத்தில் இருந்தே வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கே வருமானம் ஈட்டுவது என்பது பெரிய சவாலாக மாறியது. இதற்கிடையே இரு குழந்தைகள் பிறந்த பிறகு கூடுதல் சுமை அதிகரித்தது. லாரி ஓட்டும் தொழில் நிரந்தர வருமானம் இல்லாதபோது படிப்பறிவு இல்லாத என்னை வேலைக்கு செல்ல ஒருநாள் கூட அனுமதித்ததில்லை.

தான் கஷ்டப்பட்டாலும் மனைவி, பிள்ளைகளுக்கு அந்த கவலை இருக்கக் கூடாது என்பதில் முழு கவனத்துடன் இருந்தவர் எனது கணவர். மேலும் அவரது கனவை நிறைவேற்றும் வகையில் இரு குழந்தைகளையும் நல்ல நிலையில் படிக்க வைத்தார். இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 1 ஆம் தேதி காந்திசந்தை பகுதிக்கு வேலைக்குச் சென்றவர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அரசு மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் எனது கணவரின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அறிவுறுத்தினர். படிப்பறிவு இல்லாத நான் முதலில் மறுத்தபோது எனது மகள், மகன் அளித்த ஊக்கத்திற்கு பிறகு ஒப்புக் கொண்டேன்.

பல்வேறு நடைமுறைகளுக்கு பிறகு எனது கணவரின் உடல் உறுப்புகள் மூலம் 3 பேர் உயிர் வாழ இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த தகவல் வாழ்க்கையே பறிபோன நிலையிலும் சிறிய கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சி. உலகளவில் மறைந்தாலும், உடல் உறுப்புகள் மூலம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என நினைத்து வாழ்கிறேன். எனது கணவர் உடல் உறுப்புகளை தானம் பெற்றவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்த போதும் நான் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டேன். இதுவரை அவர்கள் யாரென்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை.  ஏனென்றால் அவர்களுக்கு எதாவது ஒன்று என்றால் அவற்றை தாக்கிக்கொள்ளும் மனநிலை என்னிடம் இல்லை.

எனது கணவரை இழந்த பிறகு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் தடைப்பட்டது மட்டுமின்றி குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் துய வளனார் கல்லூரியில் இளநிலை பட்டபடிப்பு படித்து வரும் எனது மகன் கல்லூரிக்கு சென்றுவிட்டு பகுதி நேரமாக பேன்சி கடையில் வேலை பார்த்து வருகிறார். நான் கிடைக்கும் வேலைக்கு சென்று வருகிறேன். பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள எனது மகள் கங்காஷர்மி  அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் பள்ளிக்கு சென்று வருகிறார். திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்று வரை எங்களுக்கு யாருடயை ஆதரவும் என்பது கிடையாது. எனவே, எங்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments