தலையங்கம்

எல்லையில் சிந்திய ரத்தம்! | இந்திய - சீன எல்லையில் நடந்த மோதல் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உள்ளிட்ட கர்னல் சந்தோஷ் பாபுவின் தலைமையிலான 20 இந்திய ராணுவ வீரர்கள் எல்லையைக் காப்பதற்காக ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதலில் முதன்முறையாக உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. 
வழக்கமான போர் முறைகள் கையாளப்படாமல் நேரடியான கைகலப்பு இந்திய - சீன எல்லையில் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான இந்தியப் படைகளைவிட பல மடங்கு எண்ணிக்கை பலமுள்ள சீன வீரர்களை எதிர்த்து நமது வீரர்கள் போராடி ஏறத்தாழ 50 சீன வீரர்கள் நமது வீரர்களால் கொல்லப்பட்டனர் அல்லது படுகாயமடைந்தனர். 
இது ஏதோ பயங்கரவாதத் தாக்குதல் அல்ல. இரு நாட்டு ராணுவத்திற்கு இடையேயான மோதல். இந்த மோதல் யுத்தமாக மாறிவிடக் கூடாது என்று சீன ராணுவம் (அரசு) கருதியதால்தான் துப்பாக்கிப் பிரயோகம் இல்லாமல் கைகலப்பில் இறங்கியிருக்கிறார்கள். போர்ச் சூழல் ஏற்படவும் வேண்டும். அதே நேரத்தில் போர் மூண்டுவிடவும் கூடாது என்கிற சீன ராஜதந்திர உத்தியின் வெளிப்பாடுதான் கல்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை நடந்திருக்கும் மோதல்.
1962 இந்திய - சீன யுத்தமும் இதே கல்வான் பள்ளத்தாக்கை மையமாக வைத்துத்தான் நடந்தது என்பதை நாம் நினைவுகொள்ள வேண்டும். அப்போதும் இதேபோல இந்தியாவும் சீனாவும் கல்வான் பள்ளத்தாக்கில் ஒருவர் மாற்றி ஒருவர் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டியதாக குற்றம்சாட்டியதன் பின்னணியில் போர் மூண்டது. ஒருவேளை 1962-இல் நடந்த போரில் இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவை நினைவுபடுத்தி எச்சரிப்பதற்காக சீன ராணுவம் இந்த அடையாள மோதலை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
சாதாரணமாக இரு நாடுகளுக்கும் இடையே யுத்தம் மூளுவதற்கு இரண்டு காரணங்கள்தான் அடிப்படையாக இருக்கும். ஒரு காரணம் ஆக்கிரமிப்பு. இல்லையென்றால், உள்நாட்டுப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவது. இந்தியாவைப் பொருத்தவரை, அதன் கவனம் கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிர்கொள்வதிலும், பொருளாதாரத்தை கட்டுக்குள் வைத்திருப்பதிலும் முழுமையாக இருக்கும் நிலையில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சீனாவுக்கு அதற்கான அவசியம் இருக்கிறது. 
கொவைட் 19 தீநுண்மிப் பரவல் குறித்து உலக நாடுகளை எச்சரிக்கவில்லை என்பதால் சீனாவுக்கு எதிராகக் கடுமையான கண்டனம் சர்வதேச அளவில் எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் வர்த்தகத் தடை, ஏற்றுமதிகள் குறைந்து விட்டதால் உள்நாட்டுப் பொருளாதாரம் நிலைகுலைந்திருக்கும் நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், ஹாங்காங்கில் மட்டுமல்லாமல் சீனாவின் பல்வேறு மாநிலங்களில் காணப்படும் அரசுக்கு எதிரான மனநிலை என்று பல பிரச்னைகளை அதிபர் ஷி ஜின்பிங் எதிர்கொள்கிறார். இந்த நேரத்தில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப வேண்டிய கட்டாயம் சீனாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. 
1950-இல் கல்வான் நதிக்கு மேற்குப் புறத்தில் அமைந்திருக்கும் அக்சாய் சின் பீடபூமியை சீனா கைப்பற்றியது. அங்கிருந்து அந்த நதியின் மேற்குக் கரையோரமாக உள்ள இமயமலைப் பகுதியில் அமைந்திருக்கும் ஷியோக் நதி பள்ளத்தாக்கை 1960-இல் கைப்பற்றியது. அப்போது எல்லை மோதல்கள் ஏற்பட்டன. தனக்குச் சாதகமாக எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மாற்றிக் கொண்டு எட்டு கி.மீ. நீள சாலையை அமைத்துக்கொண்டது. இதுபோல, அவ்வப்போது தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வரையறுக்கப்படாத இந்திய - சீன எல்லையின் பல பகுதிகளை சீனா கைவசப்படுத்திக் கொண்டது.
ஆசியாவிலுள்ள சிறிய நாடுகள் அனைத்தையும் தனது நிதியுதவியாலும் முதலீட்டாலும் கடனாளியாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது சீனா. சீனாவைப் பொருத்தவரை அதை எதிர்கொள்ளும் வல்லமையுள்ள சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்றிருக்கும் இந்தியாவை மட்டும்தான் தனக்கு சவாலாகக் கருதுகிறது. அதற்கு ஏற்றாற்போல ஜப்பான், வியத்நாம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவின் தலைமையில் சீனாவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை ஏற்படுத்த நினைக்கின்றன. சீனாவின் ஆத்திரத்துக்கு இது ஒரு முக்கியமான காரணம்.
ஆரம்பம் முதலே சீன விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடும், கணிப்புகளும் தவறாகவே இருந்திருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவராமல் இருப்பது சீனாவின் உத்தி. 
சீனாவைப் பொருத்தவரை, எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி இந்தியாவை ஒருபுறம் அச்சுறுத்திக் கொண்டிருக்க வேண்டும். இன்னொருபுறம் இரு நாடுகளுக்கும் இடையேயான 100 பில்லியன் டாலர் (ரூ.7.6 லட்சம் கோடி) வர்த்தக உறவு பாதிக்கப்படவும் கூடாது. நமது பலவீனம் வரையறுக்கப்படாத எல்லை என்றால், சீனாவின் பலவீனம் வர்த்தகத்தில். இந்தியாவுடனான வர்த்தகம் துண்டிக்கப்பட்டால், சீனாவின் பொருளாதாரம் ஆட்டம் காணும். 
 நாம் ஆரம்பத்திலேயே வர்த்தக உறவைவிட, எல்லைப் பிரச்னைக்கான தீர்வை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். கடந்த 70 ஆண்டுகளாக சீனாவின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் சமரசப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவது நமது தவறு. அதனால், இனியாவது இரு நாட்டு வர்த்தக உறவுக்கு அடிப்படையாக எல்லைப் பிரச்னைக்கான தீர்வை இந்தியா வற்புறுத்தியாக வேண்டும். ராஜதந்திரத்தை ராஜதந்திரத்தால்தான் முறியடிக்க வேண்டும்.
எல்லையில் வீரமரணம் அடைந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT