அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியவை.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக - தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற முழு உழைப்பைக் கொடுக்கிறார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆங்கில செய்திச் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பற்றி பேசியுள்ளார்.
அதில், பாஜக 2024 மக்களவைத் தேர்தலில் உங்களுடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற நெறியாளரின் கேள்விக்கு, ”கூட்டணி என்பது அந்தந்த சூழ்நிலைக்குத் தகுந்தவாறு அமைவது” என்று பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அப்போது சூழ்நிலை எந்த மாதிரி இருந்தது? கூட்டணி அமையாததற்கு அண்ணாமலை காரணமா? என்ற கேள்விக்கு, “அண்ணாமலையைப் பொறுத்தவரை எங்களுடன் சுமூகமாக, இயற்கையாக இருந்துகொண்டிருக்கிறார். அவர் பாஜகவில் இருக்கிறார். ஆகவே, அந்தக் கட்சி வளர்வதற்கு பாடுபட்டார். அதோடு, தற்போது அதிமுக - தேசிய ஜனநாயகக் கூட்டணி இணைந்த நிலையில் அவர் கூட்டணிக்காக தன்னுடைய கடுமையான உழைப்பைத் தந்துகொண்டிருக்கிறார்” என்றார்.
Advertisement
Advertisement
மேலும், அண்ணாமலையுடனான உறவு குறித்து கேட்டபோது, ”அவர் பாஜக. நாங்கள் அதிமுக. எங்களது கூட்டணி அமைந்தவுடன் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்தக் கூட்டணி வெற்றிபெறுவதற்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்து வருகிறார். முழு உழைப்பக் கொடுத்துள்ளார்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.