ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கியதே திமுகவின் சாதனை: எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியவை..
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவையில் நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்வில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பேரவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
Advertisement
இந்நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உட்பட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், உட்பட கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதற்காக பிரம்மாண்ட மேடை மற்றும் சுமார் 5 லட்சம் பேர் அமரும் விதமாக மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இந்தத் தேர்தல் தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் நடக்கின்ற தேர்தல். குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற தேர்தல்.
இன்று தமிழகத்தில் ஊழல் நிறைந்த, மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது.
ஏற்கனவே எம்ஜிஆர் அவர்கள் அதிமுகவை தொடங்கியபோது தீயசக்தி திமுகஅழியவேண்டும் என்ற அடிப்படையில் கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்கு பின் அம்மா அவர்கள் சிறப்பான ஆட்சி கொடுத்தார்.
அதேபோல, இந்தியாவிற்கு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மிகப்பெரிய பெருமை கிடத்துள்ளது. அவருடைய உழைப்பு மெச்சத்தக்கது. இரவுபகல் பாரமல் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உழைப்பவர் பிரதமர் மோடி. இந்த முறை நாங்கள் அற்புதமான கூட்டணி அமைத்துள்ளோம்” என்று பேசினார்.
மேலும், “கடந்த 5 ஆண்டுகளில் திமுக வின் சாதனை 5 லட்சம் கோடி கடன் பெற்றது. இந்தியாவில் அதிக கடன் வாங்கிய சாதனையை தான் முதல்வர் ஸ்டாலின் படைத்துள்ளார்.
73 ஆண்டுகாலம் பல கட்சிகள் தமிழகத்தை ஆண்டுள்ளன. 2011 முதல் 2021 வரை தமிழகத்தின் கடன் 4.80 லட்சம் கோடி. 2021 முதல் 26 வரை திமுக ஆட்சியில் மட்டுமே 5 லட்சம் கோடி கடன்.
இந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தை முன்னேற்ற எந்த பெரிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை. ஆனால், அதிமுக ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தேவையான திட்டங்கள், நிதிகளைப் பெற்று இந்தியாவில் முதன்மை மாநிலம் என்ற பெருமையை அடைந்தோம்.
மத்தியில் பாஜக ஆட்சியில் கங்கையை புணரமைத்ததைப் போல நம்முடைய காவிரியை ஆற்றை மேம்படுத்த ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டத்திற்கு மத்திய அரசு 11,000 கோடி ஒதுக்கியது.
ஆனால்,அந்தத் திட்டத்தை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் முடக்கி வைத்துள்ளார். ஆனால், தமிழகத்திற்கு நிதி கொடுக்கவில்லை, மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று அவதூறு மட்டும் பரப்புகிறார். இப்படிப்பட்ட ஆட்சி தேவையா?
திருப்பூர், கோவை, நீலகிரியைச் சேர்ந்த 23 தொகுதிகளில் 2016 இல் 17 தொகுதிகளில் வென்றது. 2021 ல் கோவையில் 10 இடங்களில் நம்முடைய கூட்டணி வென்றது. தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் கோவை, திருப்பூர், நீலகிரி பகுதிகளில் 100 சதவீதம் நாம் வெல்லவேண்டும்.
தமிழகம் முழுவதும் 210 இடங்களுக்கும் மேலாக அதிமுக தலைமையிலான கூட்டணி வெல்லும்.
நாம் கோவையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். நீலகிரி மற்றும் திருப்பூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளைக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரமுடிந்ததா?
அதிமுக ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 7 சட்டக்கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 4 வேளாண்மை கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையம் கொண்டுவந்து இந்தியாவில் பட்டப்படிப்புகளில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் நாம் எந்தத் திட்டமும் கொண்டு வரவில்லை என்று பொய் பரப்புகிறார். அதிமுக ஆட்சி பொற்கால் ஆட்சி.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ ஊழல் நிறைந்திருக்கும். இப்போது எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக வீழவேண்டும்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 3 மாதங்களில் போதைப்பொருள் முழுமையாக ஒழிக்கப்படும். தமிழகத்தை போதைப் பொருளில்லாத மாநிலமாக உருவாக்குவோம். மத்திய அரசிடம் இருந்து தேவையான திட்டங்களைப் பெற்று தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக உருமாற்றுவோம்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.