எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறித்து...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்புமனுவில் சொத்து, வருமான விவரங்களை மறைத்தது குறித்து விசாரணை நடத்த வருமானவரித் துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, வெற்றி பெற்று, பேரவை உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில், வேட்புமனுவில் சொத்து, வருமான விவரங்களை எடப்பாடி பழனிசாமி மறைத்துள்ளதாகக் கூறி, அந்த தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சக்திவேல் பெருமாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
Advertisement
Advertisement
அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் முழுமையான சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை என்றும், 2021, 2026 ஆம் ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒப்பிட்டு பார்த்தால், ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. அதில், உண்மைத் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த வருமானவரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு புதன்கிழமை(ஜூன் 3) விசாரணைக்கு வந்தது.
அப்போது, வருமானவரித் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஏற்கனவே இதேபோன்ற வழக்குகளில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. தேர்தல் வழக்குதான் தொடர முடியும் என தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.