நாற்காலியின் 2 கால்கள் மட்டுமே தவெகவுடையது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் விஜய்யை விமர்சித்துப் பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் விஜய்யை விமர்சித்துப் பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசினார். அதில், ”தவெக அரசு பெரும்பான்மையான இடத்தில் வெற்றி பெறவில்லை. 108 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 8 மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட அவர்கள் வெற்றி பெறவில்லை. பல கட்சிகள் ஆதரவு கொடுத்துதான் இன்றைக்கு விஜய் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். ஒரு நாற்காலிக்கு 4 கால்கள் இருக்கும். அதில் 2 கால்கள் தான் தற்போதைய ஆட்சியாளரின் கால். மீதி இரண்டு இரவல் கால்.
திமுக மூலம் வெற்றிபெற்ற கூட்டணி கட்சிகள் இன்று தவெகவுக்கு ஆதரவு கொடுத்து அதனால் நீங்கள் ஆட்சியமைத்திருக்கிறீர்கள். அந்த இரு கால்கள் நகர்கிறபோது நாற்காலி எப்போது வேண்டுமானாலும் தானாக சாயும். அப்படிப்பட்ட நிலைமைதான் தவெகவுக்கு இருக்கிறது.
Advertisement
Advertisement
தேர்தல் நேரத்தில் இரு திராவிட கட்சிகளும் அகற்றப்பட வேண்டும் என்று தவெக தலைவர் குறிப்பிட்டார். ஆனால், தற்போது நிலைமை என்ன. திமுக கூட்டணியில் வெற்றிபெற்ற கட்சிகள் தான் தவெக ஆட்சிக்கும் முட்டுக்கொடுத்து தாங்கிக் கொண்டிருக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக போன்ற சில கட்சிகளின் ஆதரவால் தான் தவெக ஆட்சியில் உள்ளது. தனிப்பெரும்பான்மையில் ஆட்சியமைக்கவில்லை. அவர்கள் தயவு எவ்வளவு நாள்கள் உள்ளதோ அவ்வளவு நாள்கள் தான் இவர் ஆட்சியில் இருப்பார் என்பதை அவர் எண்ணவேண்டும்.
பீனிக்ஸ் பறவையைப் போல அதிமுக மீண்டும் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கும். அதிமுகவை உடைக்கவோ முடக்கவோ முடியாது. இருபெரும் தலைவர்களான எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி அதிமுக. அவர்கள் தெய்வங்களாக நின்று ஆசி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். தப்புக் கணக்குப் போடாதீர்கள்.
திரையுலகில் இருந்து நீங்கள் இந்த இடத்திற்கு வந்துள்ளீர்கள். நாங்கள் மக்களுடன் இருந்து சேவை செய்து ஆட்சியில் இருந்தோம்” எனப் பேசியுள்ளார்.