நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
சென்னையில் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்கள் சந்திப்பு பற்றி...
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இரண்டாவது நாளாக தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொண்டுள்ள சந்திரபாபு நாயுடு, சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் தோல்வியடையச் செய்தது குறித்து விமர்சித்துப் பேசினார்.
Advertisement
அவர் பேசியதாவது:
”மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடித்ததாக ராகுலும் மு.க. ஸ்டாலினும் கூறுகிறார்கள். இது எத்தகைய வெற்றி என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.
நாட்டின் மூத்த அரசியல்வாதி நான். 48 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். 1978 முதல் எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். 1996 முதல் 2026 வரை பலமுறை கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை இவர்கள் எதிர்த்துள்ளனர்.
அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் அதிகரிக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 39-ல் இருந்து 59 ஆகவும், ஆந்திரத்துக்கு 25-ல் இருந்து 38 ஆகவும், உத்தரப் பிரதேசத்துக்கு 80-ல் இருந்து 120 ஆகவும் அதிகரிக்கும். எந்த மாநிலமும் தொகுதிகளை இழக்காது.
உங்களுக்கு இதில் என்ன வெற்றி கிடைத்தது. எப்போது தொகுதி மறுவரையறை செய்ய அனுமதிப்பீர்கள். இதைவிட சிறந்த மாற்றுத் திட்டம் இருந்தால் ராகுலும், ஸ்டாலினும் கூற வேண்டும்.
இதன்மூலம் ஆண்களும் பலனடைவார்கள். பெண்களுக்கும் 33% இடம் உறுதி செய்யப்படும். இதில் என்ன அநீதி? தென் மாநிலங்கள் தொகுதிகள் எப்படி குறையும்?
நான் தென் மாநிலங்களுக்கு ஆதரவளிக்கவில்லை, எதிரானவன் என்று முத்திரை குத்துகிறார்கள். நானும் திராவிடன் தான். அதை மறந்துவிடாதீர்கள்" என்றார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் ராம் மோகன் நாயுடு ஆகியோரும் கலந்துகொண்டனர்.