முகப்பு
தற்போதைய செய்திகள்

தே. ஜ. கூட்டணிக்கு ஆதரவாக நாளை கோவையில் சந்திரபாபு நாயுடு பிரசாரம்!

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து ஆந்திரம் மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு பிரசாரம் குறித்து...

Updated On : 19 ஏப்ரல் 2026, 4:59 pm IST
ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து ஆந்திரம் மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு ஏப்.20, 21 ஆகிய இரண்டு நாள்கள் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

தமிழக பேரவைத் தோ்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் பாஜக, பாமக, அமமுக , தமாகா உள்ளிட்ட கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தவெக என மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், தலைவா்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருவதால் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திரம் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஏப்.20, 21 ஆகிய இரண்டு நாள்கள் தமிழ்நாடு முழுவதும் பிரசாரப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பிரசாரத்தின் முதல் நாளான நாளை(ஏப்.20) கோவை நகரில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். பின்னர் ஓசூர் செல்லும் நாயுடு, தளி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மாலை சென்னை அடுத்த ஆவடியில் நடைபெறும் சாலை வலத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.

தனது பிரசார பயணத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (ஏப். 21) மதுரை செல்லும் நாயுடு, அங்கிருந்து சாத்தூர் செல்கிறார். அங்கு சமூகத் தலைவர்களுடனான சந்திப்புக்கு பின்னர் பிரசார கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.

தமிழகத்தில் தனது இருப்பை விரிவுபடுத்துவதற்காக என்டிஏ கூட்டணியின் உத்திசார் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த பிரசாரப் பயணம் அமைந்துள்ளது. என்டிஏ கூட்டணியின் நல்லாட்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை முன்னிலைப்படுத்தி தெலுங்கும் மற்றும் தொழில் நகரங்களில் வசிக்கும் மக்களிடம் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதே நாயுடுவின் 2 நாள்கள் பிரசாரத்தின் முக்கிய நோக்கமாக தெலுங்கு தேசம் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21-ஆம் தேதி மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது; வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

summary

Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu will campaign for the NDA in Tamil Nadu with a two day tour starting April 20.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.