விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்!
விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டது பற்றி...
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸின் 5 உறுப்பினர்களின் ஆதரவை நேற்று தவெக பெற்ற நிலையில், இன்னும் 6 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது. இடதுசாரிகள் (4), விடுதலைச் சிறுத்தைகள் (2) கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ளது.
Advertisement
இதனிடையே, நேற்று மாலை ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகரை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் உரிமை கோரினார். ஆனால், இதுவரை ஆட்சி அமைக்க விஜய்யை ஆளுநர் அழைக்கவில்லை.
ஆளுநர் மாளிகையில் இருந்து விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில், அதிகாரிகள் பதவி ஏற்புக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய முற்பட்டது கடுமையான விமா்சனத்துக்கு உள்ளானது. இதுகுறித்து தலைமைச் செயலா், உள்துறைச் செயலா், காவல் துறைத் தலைவா் உள்ளிட்டவா்களிடம் தனது அதிருப்தியை ஆளுநா் தெரிவித்ததாக அரசு வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் பதவியேற்பு விழாவுக்கு செய்யப்பட்டு வந்த முன்னேற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க தாமதம் ஏற்படும் நிலையில், முதல்வருக்கான பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருப்பதாக விஜய்யிடன் அதிகாரிகள் எடுத்துரைத்தை அடுத்து, பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.