விஜய்க்கு ஆதரவாக போராட்டம்? பாதுகாப்பு வளையத்துக்குள் மெரீனா!
சென்னை மெரீனா கடற்கரையில் காவல்துறை பாதுகாப்பு அதிகரித்துள்ளது பற்றி...
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், மெரீனா கடற்கரையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.
தனிப் பெரும் கட்சியான தவெகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படாததற்கு எதிராக சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. விஜய்க்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று இளைஞர்கள் கூடவுள்ளதாக தகவல்கள் பரவின.
Advertisement
இதனிடையே, தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.