முகப்பு
தொகுதியும் வேட்பாளர்களும்

அந்த நாள் ஞாபகம்... சேந்தமங்கலம் முன்னாள் எம்எல்ஏ சீ. சிவப்பிரகாசம்!

25 வயதில் அரசியல் வாழ்வைத் தொடங்கி, தற்போது 72 வயதிலும் களப் பணியாற்றி வருபவர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முறை போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றவர், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்ற சிறப்புக்குரியவர் சேந்தமங்கலம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சீ. சிவப்பிரகாசம்.

Updated On : 22 மார்ச், 2026 at 10:54 PM
சேந்தமங்கலம் முன்னாள் எம்எல்ஏ சீ. சிவப்பிரகாசம்.
பகிர்:

25 வயதில் அரசியல் வாழ்வைத் தொடங்கி, தற்போது 72 வயதிலும் களப் பணியாற்றி வருபவர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முறை போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றவர், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்ற சிறப்புக்குரியவர் சேந்தமங்கலம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சீ. சிவப்பிரகாசம்.

தன்னுடைய அனுபவம் குறித்து அவர் கூறியது: என்னுடைய சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், வாழவந்திநாடு கிராமம். அப்போதைய அதிமுக மாவட்டச் செயலரான சேலம் கண்ணன் மூலம் எம்ஜிஆரை சந்தித்தேன். 1977 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையே அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு 1980-இல் மீண்டும் தேர்தல் நடைபெற்றது.

அப்போது எம்ஜிஆர் போட்டியிட வாய்ப்பளித்தார். அந்தத் தேர்தலில் 37,577 வாக்குகளுடன் வெற்றி பெற்றேன். கொல்லிமலை அடிவாரப் பகுதியான காளப்பநாயக்கன்பட்டியில் தங்கியிருந்து மக்கள் பணியாற்றினேன்.

முதல் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, எம்ஜிஆரை சந்தித்தபோது கட்டியணைத்து வாழ்த்து கூறினார். தமிழக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தபோது அங்கிருந்த தலைவர்களைப் பார்த்து மிரட்சியடைந்தேன். எனது தொகுதிக்கு தேவையான திட்டங்களை கேட்டபோதெல்லாம் எம்ஜிஆர் மறுக்காமல் செய்துகொடுத்தார்.

அதன்பிறகு, 1984-இல் இரண்டாவது முறை போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார். அப்போது 54,129 வாக்குகளுடன் வெற்றி பெற்றேன். 1987-இல் எம்ஜிஆர் மறைவையடுத்து, ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. 1989-இல் அதிமுக பிளவுபட்டபோது, ஜானகி அணியில் இணைந்தேன். அப்போது, திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் பழங்குடியினருக்கான தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வெற்றி பெற முடியவில்லை.

அதன்பிறகு, ஜானகி அணியிலிருந்து பிரிந்து திருநாவுக்கரசர் தொடங்கிய அண்ணா புரட்சித் தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்தேன். 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டபோது, ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். அப்போது, பிரசாரத்திற்கு நான் சென்ற நிலையில், காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள என்னுடைய வீட்டை தீ வைத்து எரித்துவிட்டனர். மனைவி, மகன், மகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். அந்தத் தேர்தலில் 7,316 வாக்குகள் மட்டுமே பெறமுடிந்தது.

இதைத் தொடர்ந்து, அரசியலில் பட்டும்படாமல் இருந்த நிலையில், 1998 காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். 2019-இல் பாஜகவில் இணைந்தேன். தற்போது தேசியப் பொதுக்குழு உறுப்பினராக உள்ளேன் என்றார் சிவப்பிரகாசம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.