வாக்கு இயந்திரத்தில் தாமரைச் சின்னம் பொத்தான் மீது ‘டேப்’... பரபரக்கும் மே.வங்க தேர்தல்!!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தாமரைச் சின்னத்தில் ‘டேப்’ ஒட்டியதால் பரபரப்பு...
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தாமரைச் சின்னத்துக்கு நேராக இருக்கும் பொத்தான் மீது டேப் ஒட்டப்பட்டிருந்ததால், அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னில்லாத அளவில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், 2-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 142 தொகுதிகளில் இன்று (ஏப்.29) காலை தொடங்கியது.
முதற்கட்ட வாக்குப்பதிவைப் போன்றே இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, கிட்டத்தட்ட 40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவுக்கு மத்தியில் சில இடங்களில் வன்முறையும் வெடித்தன.
Advertisement
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறுகள் இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் - பாஜகவினர் மோதிக்கொண்டனர். ஹூக்ளி மாவட்டம், ராம்சந்திராபூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு எந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான வன்முறையில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர்.
இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும், தெற்கு 24 ஃபர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஃபால்டா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தாமரைச் சின்னத்திற்கு நேராக இருக்கும் பொத்தான் மீது ‘டேப்’ மறைக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
தனக்கு ஆதரவாக வாக்காளர்கள் வாக்களிப்பதை மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, வேண்டுமென்றே தடுத்ததாக பாஜக வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, அவரது சின்னத்தில் வாக்களித்தால் அது செயலிழந்து போகும்படி செய்யப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பான விடியோக்களும் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. அந்தக் காணொளியில் பாஜகவின் தாமரை மற்றும் கம்யூனிஸ்ட் சின்னங்கள் மீது டேப் ஒட்டப்பட்டிருப்பது விடியோவில் பதிவாகியிருப்பதால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.