250 அரசு அலுவலர்கள் பணியிட மாற்றம்: திரிணமூல் காங்கிரஸின் மனு தள்ளுபடி!
250 அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து...
ஒரே நாளில் 250 அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் நேற்று தாக்கல் செய்த மனுவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்தது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய நாள்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வேட்பாளராகப் போட்டியிடும் பவானிபூர் உள்பட 170 காவல் நிலையங்களின் பொறுப்பு அலுவலர்கள், 83 பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் என 250-க்கும் மேற்பட்ட அலுவலர்களை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்திய தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்தது.
இதனை எதிர்த்து, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் வழக்குரைஞருமான கல்யாண் பானர்ஜி திங்கள்கிழமை (மார்ச் 30) கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தலைமை நீதிபதி சுஜோய் பால் மற்றும் நீதிபதி பார்த்தா பிரதீம் சென் ஆகியோர் அடங்கிய அமர்வில் அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, “அதிகாரிகளின் இடமாற்றங்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மனுதாரர் நிரூபிக்கவில்லை.
மனுதாரரை மாநில அரசு ஆதரிக்கிறது என்பதாலேயே அவர் வரம்பை மீறிச் செயல்படுவதை எங்களால் அனுமதிக்க முடியாது. தேர்தல் ஆணையம் கணிசமான முறையில் அதிகாரிகளை இடமாற்றம் செய்ததால் மட்டும் அது தன்னிச்சையாக செயல்படுகின்றது என்று கூறிவிட முடியாது.
மேலும், வழக்கில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை. இதனால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம்” எனத் தெரிவித்தனர்.