வாக்கு எண்ணும் பணியாளர்களை தேர்தல் ஆணையமே தேர்ந்தெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்
வாக்கு எண்ணும் பணியாளர்களை தேர்தல் ஆனையமே தேர்ந்தெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது குறித்து...
வாக்கு எண்ணும் பணியாளர்களை தேர்தல் ஆணையமே தேர்வு செய்யலாம். அதற்காக வேறு எந்த உத்தரவும் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை (மே 2) தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக மத்திய அரசுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கைக்கு எதிராக கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் செய்திருந்தது.
Advertisement
இதனையடுத்து, அந்த மனுவை கல்கத்தா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அந்தக் கட்சி தாக்கல் செய்த மனுமீதான விசாரணையை நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்ததில், “வாக்கு எண்ணிக்கை பணியாளர்களைத் தேர்தல் ஆணையம் தேர்வு செய்யலாம் என்றும், அதன்படி தேர்தல் ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கை தவறானது எனக் கூற முடியாது என்றும்” தெரிவித்தது.
தேர்தல் நாள் அறிவித்த முதலே, மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தின்மீது தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.