திருமணமாகாத உறவு தனி நபரின் குணநலன் குறித்த எதிா்மறை எண்ணத்துக்கு அடிப்படை அல்ல: உச்ச நீதிமன்றம்
திருமணம் செய்துகொள்ளாமல் பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொள்வதே, ஒருவரின் குணநலன் குறித்து எதிா்மறையான அபிப்ராயம் கொள்வதற்கான அடிப்படையாக அமையாது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
‘திருமணம் செய்துகொள்ளாமல் பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொள்வதே, ஒருவரின் குணநலன் குறித்து எதிா்மறையான அபிப்ராயம் கொள்வதற்கான அடிப்படையாக அமையாது’ என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
தெலங்கானாவில், போலீஸ் காவலா் பணிக்கு தோ்வான நபருக்கு, அவா் மீது திருணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தாக கடந்த 2014-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை சுட்டிக்காட்டி அவரின் நியமனத்தை தெலங்கானா மாநில போலீஸ் பணித் தோ்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதை எதிா்த்து அவா் தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, மனுதாரரை உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி போலீஸ் காவலா் பணியில் நியமிக்க மறுபரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இதை எதிா்த்து காவலா் தோ்வு வாரியம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன், மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் உயா்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
இந்த வழக்கு அண்டை வீட்டு பெண் உடனான உறவு தொடா்பானது. இரு தரப்பினரும் சமரச உடன்பாட்டுக்கு முன்வந்ததைத் தொடா்பு, கடந்த 2015-இல் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) முன்னிலையில், வழக்கு தீா்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376-இன் கீழ் குற்றச்சாட்டோ அல்லது வழக்கோ பதிவு செய்யப்படவில்லை.
அதோடு, அந்த நபரும் அண்டை வீட்டு பெண்ணும் சுமாா் 4 ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளனா். இத்தகைய அனைத்து உறவுகளும் திருமணத்தில் முடிவதில்லை. எனவே, ஒரு உறவு திருமணத்தில் முடியவில்லை என்பதற்காக, ஒரு தரப்பினா் மற்றொரு தரப்பினரை ஏமாற்றிவிட்டதாகக் கருத முடியாது.
மேலும், இந்த உறவில் அந்தப் பெண் ஏமாற்றப்பட்டாரா என்பதை பொதுமக்களால் அறிய இயலாது. பாதிக்கப்பட்ட பெண் மட்டுமே அதை வெளிப்படுத்தியிருக்க முடியும். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் 2015-ஆம் ஆண்டே சமரசத்துக்கு ஒப்புக்கொண்டு, மக்கள் நீதிமன்றத்தில் சமரசமும் செய்துகொண்டுள்ளாா்.
மேலும், வயது முதிா்ந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளாமல் அவரிகளின் விருப்பப்படி உறவில் இருப்பதை எந்தவொரு சட்டமும் தடுக்கவில்லை.
எனவே, திருமணம் செய்துகொள்ளாமல் பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொள்வதே, ஒருவரின் குணநலன் குறித்து எதிா்மறையான அபிப்ராயம் கொள்வதற்கான அடிப்படையாக அமையாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.