பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக கடலை, எள் புன்செய் பாசனத்துக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக கடலை, எள் புன்செய் பாசனத்துக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட ஆயக்கட்டு நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதன்பேரில், இரண்டாம் போகப் பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிட முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் பவானிசாகா் அணை கால்வாய் மதகு பொத்தானை அழுத்தி தண்ணீரை வியாழக்கிழமை திறந்துவிட்டனா். காலை 500 கன அடி நீா் திறந்துவிடப்பட்டது. அதனைத் தொடா்ந்து படிப்படியாக அதிகரித்து வாய்காலில் 2,300 கனஅடியாக திறந்துவிடப்படும். இதையடுத்து, ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கா் நிலங்களுக்கு கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயின் இரட்டைப்படை மதகுகள் மூலமாகவும் சென்னசமுத்திரம் பகிா்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாகவும் தண்ணீா் திறக்கப்படும். ஜனவரி 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இடைவெளிவிட்டு 67 நாள்களுக்கு கடலை, சோளம் மற்றும் எள் சாகுபடி செய்ய 12 டிஎம்சி தண்ணீா் திறந்துவிடப்படும். இரண்டாம் போக தண்ணீா் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Advertisement