2.3.1976: பிச்சைக்காரர் ஒழிப்பு இயக்கம் - பம்பாய் நகரில் நூற்றுக்கணக்கில் பிச்சைக்காரர் கைது
பிச்சைக்காரர் ஒழிப்பு இயக்கம் பற்றி...
பம்பாய், மார்ச். 1 - மகாராஷ்டிர அரசின் உத்தரவின் பேரில் பம்பாய் நகரில் இன்று பிச்சைக்காரர் ஒழிப்பு இயக்கம் மேற்கொள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்களை போலீசார் பிடித்துச் சென்றனர்.
சுமார் 200 பிச்சைக்காரர்கள் பிடிக்கப்பட்டதாக தெற்கு பம்பாயிலுள்ள 3 போலீஸ் நிலையங்களிலிருந்தான முதல் தகவல்கள் கூறின.
பம்பாய் நகரிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் மட்டும் 75 ஆயிரம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இரு நோக்கங்களுடன் பிச்சைக்காரர்கள் ஒழிப்பு இயக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பம்பாய் நகரில் பிச்சைக்காரர்களால் மக்களுக்கு அதிகரித்து வரும் தொல்லையை ஒழிப்பது ஒரு நோக்கம். பிச்சைக்காரர்களில் உடல் வலு உள்ளவர்களுக்கு ஜயக்வாடி அணை போன்ற திட்டங்களில் வேலை அளிப்பது இரண்டாவது நோக்கம்.
கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர்கள் பம்பாயின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான கோர்கவானுக்கு கொண்டு செல்லப்படுவர். அங்கு அவர்கள் இரு விசேஷ கோர்ட்டுகள் முன்பாக ஆஜர்படுத்தப்படுவர். பிச்சைக்காரர்களை என்ன செய்வது என்பது பற்றி போலீசாருக்கு கோர்ட்டார் தகுந்த உத்தரவுகளைப் போடுவர்.
வேலை செய்வதற்கு லாயக்கற்ற பிச்சைக்காரர்கள் அரசு நடத்தும் பிச்சைக்காரர் முகாம்களுக்கு அனுப்பப்படுவர்.
நகரில் ஜனநடமாட்டம் மிகுந்த தெருக்களிலும் மின்சார ரயில் வண்டிகளிலும் மற்றும் கோயில் வட்டாரங்களிலும் பிச்சை எடுப்பதற்கு தங்களது பெற்றோர்களால் அல்லது பிறரால் பயன்படுத்தப்படுகிற சிறுவர், சிறுமியரை தனியே பிரித்து அவர்களை பராமரிப்பதற்கும் அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மீட்பு இக்குழந்தைகள் விடுதிகளுக்கு அனுப்பப்படுவர். இவ்விதக் குழந்தைகளையும், மற்றும் ஐயோதிக, ஊனமுற்ற பிச்சைக்காரர்களையும் பராமரிப்பதற்கு உதவ பல தர்ம அமைப்புகள் முன் வந்துள்ளன. ...
தூய வாழ்வுக்கு சமயப்பற்று தேவை - உலக ஹிந்து மகாநாட்டில் ஸ்ரீ காஞ்சி பெரியவர் ஆசியுரை
சென்னை, மார்ச். 1 - மனிதன் மனிதனாக மட்டுமேயன்றி தூய்மையாகவும் வாழ மதக் கருத்துக்களே அடிப்படையாக உள்ளன. ஆகவே மதப் பற்றும், சமயப் பற்றும் மக்களிடையே ஏற்பட வேண்டும் என்று ஜகத் குரு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்று இங்கு உலக ஹிந்து மகாநாட்டை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில் கூறினார்.
ஐந்து நாள் உலக ஹிந்து மகா நாடு இன்று புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபத்தில் ஆரம்பமாகியது. மகாநாட்டை ஆரம்பித்து வைத்து காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
பத்மஸ்ரீ எம்: எஸ் சுப்புலட்சுமி பிரார்த்தனை கீதம் பாடினார். மகாநாட்டுக் காரியதரிசி பேராசிரியர் டாக்டர் டி. எம். பி. மகாதேவன் வரவேற்புரை நிகழ்த்தினார். மகாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து 2000 பிரதிநிதிகளும், ஸ்ரீலங்கா, மலேசியா, பீஜித் தீவு, தென்னாப்பிரிக்கா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து 60 பிரதிநிதிகளும் வந்திருந்தனர். ...