அரசு மருத்துவமனையில் டெங்கு கொசு ஒழிப்பு முகாம்
அரக்கோணம் நகராட்சி சார்பில் அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் நகராட்சி சார்பில் அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணத்தில் கடந்த சில நாள்களாக டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் ஆங்காங்கே தென்பட்ட நிலையில், நகரில் அரக்கோணம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தொடர்ந்து ஒரு வாரமாக டெங்கு காய்ச்சல் வராத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆணையர் செளந்தரராஜன் தலைமையில் நகராட்சி சுகாதார அலுவலர் சுருளிராஜன் மற்றும் 40-க்கும் மேற்பட்ட டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் மருத்துவமனை வளாகத்தின் அனைத்து வார்டுகள், கழிப்பறைகள், வளாகத்தில் போட்டு வைக்கப்பட்டிருந்த உபயோகப்படுத்தப்படாத பொருள்களை அகற்றினர்.
மேலும் நகராட்சி வளாகம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.