ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் வெள்ளிக்கிழமை தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் அரசு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதனால் மருத்துவ சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கோரியும் மருத்துவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.
போராட்டத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறியது:
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து ஜெர்சி வகை மாடுகளை இறக்குமதி செய்வதால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதை உணர்ந்து அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, எங்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு போராட்டம் நடத்தப்பட உள்ளது. மனிதச் சங்கிலி, கருப்புப் பட்டை அணிந்து பணிக்குச் செல்லுதல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளோம். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எங்கள் போராட்டம் தொடரும் என்றார் அவர்.