முகப்பு
இந்தியா

தேசிய இடைநிலைக் கல்வி: திட்டப் பணிகளை கண்காணிக்க 4 குழுக்கள்

சென்னை, பிப்.4: தேசிய இடைநிலைக் கல்வித் திட்டப் பணிகளைக் கண்காணிக்க 4 குழுக்களை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம் (ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான்}ஆர்.எம்.எஸ்.ஏ.) வர

Updated On : 20 செப்டம்பர் 2012, 3:36 pm IST
பகிர்:

சென்னை, பிப்.4: தேசிய இடைநிலைக் கல்வித் திட்டப் பணிகளைக் கண்காணிக்க 4 குழுக்களை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம் (ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான்}ஆர்.எம்.எஸ்.ஏ.) வரும் 2010}2011 கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.

இடைநிலைக் கல்வி (ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு) மாணவர் இடைநிற்றலை நிறுத்துதல், பொருளாதாரத்தில் பின்தங்கியப் பகுதிகளைச் சேர்ந்த மாணவியர்}மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Advertisement

Advertisement

இத்திட்டத்தை அமல்படுத்தவும், திட்டமிடுதல் மற்றும் கண்காணிப்பு செய்யவும் மாநிலக் குழு, மாவட்டக் குழு, கல்வி மாவட்டக் குழு, பள்ளி நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுக் குழு என 4 குழுக்கள் ஏற்படுத்தப்படும்.

இக்குழுக்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு குழுக்களை உடனே ஏற்படுத்தும்படி பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை, தமிழகப் பள்ளிக் கல்விச் செயலாளர் எம்.குற்றாலிங்கம் அண்மையில் பிறப்பித்துள்ளார்.

மாநிலக் குழு...: மாநிலக் குழுவுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் தலைவராக இருப்பார். அவரைத் தொடர்ந்து "அனைவருக்கும் கல்வி' திட்டத்தின் திட்ட இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் என 23 பேர் இக்குழுவில் உறுப்பினராக இடம்பெறுவர். மாதமொரு முறை இக்குழு கூடி திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும்.

மாவட்டக் குழு...: மாவட்டக் குழுவுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைவராக இருப்பர். முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுப்பினர் செயலாளராகவும், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.), மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட அலுவலர்கள், எஸ்.சி.}எஸ்.டி. மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் என 21 பேர் உறுப்பினராக இடம்பெறுவர்.

இக்குழு மாவட்ட அளவிலான மாணவர் சேர்க்கை, இடைநிற்றல் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.

கல்வி மாவட்டக் குழு...: கல்வி மாவட்டக் குழுவுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் தலைவராகவும், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், தன்னார்வ பிரதிநிதி உள்பட 13 பேர் உறுப்பினராக இடம்பெறுவர். இக்குழு மாதமொருமுறை கூடி ஆலோசிக்க வேண்டும்.

பள்ளி நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுக் குழு: இக்குழுவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைவராகவும், நகரப் பகுதிகளில் மாநகராட்சி உறுப்பினர், கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர் உள்ளிட்ட 5 பேர் உறுப்பினராக இடம்பெறுவர்.

இக்குழு பள்ளிகளின் தேவைகளை கண்டறிதல், மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் கலை, இலக்கியப் போட்டிகளை நடத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.