5 தி.மு.க. அமைச்சர்கள் ராஜிநாமா: குடியரசுத்தலைவர் பிரணாப் ஏற்பு
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் ராஜிநாமா கடிதங்களை குடியரசுத் தலைவர்
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் ராஜிநாமா கடிதங்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டார்.
இலங்கைத் தமிழர் பிரச்னை காரணமாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தி.மு.க. செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றது. இதையடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த 5 அமைச்சர்களும் புதன்கிழமை பிரதமரை சந்தித்து தங்கள் ராஜிநாமா கடிதங்களைக் கொடுத்தனர்.
""பிரதமரின் பரிந்துரையின் பேரில், கீழ்க்கண்ட 5 மத்திய அமைச்சர்களின் ராஜிநாமா கடிதங்களும் குடியரசுத் தலைவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது'' என குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
Advertisement
Advertisement
ராஜிநாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைச்சர்களின் பெயர் வருமாறு: ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் எம்.கே. அழகிரி, நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணையமைச்சர் எஸ்.காந்தி செல்வன், வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் டி.நெப்போலியன் ஆகியோர் புதன்கிழமை தங்கள் ராஜிநாமா கடிதங்களை பிரதமரிடம் கொடுத்தனர்.
இதையடுத்து, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணையமைச்சராக (தனிப் பொறுப்பு) உள்ள ஸ்ரீகாந்த் ஜேனா, ரசாயனம் மற்றும் உரத் துறை இணையமைச்சராக (கூடுதல் பொறுப்பு) செயல்படுவார் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.