சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: என் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை
தில்லியில் 1984ஆம் ஆண்டு ஏற்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜகதீஷ் டைட்லர் கூறியுள்ளார்.
தில்லியில் 1984ஆம் ஆண்டு ஏற்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜகதீஷ் டைட்லர் கூறியுள்ளார்.
கலவரம் நடந்தபோது அந்த இடத்தில் தான் இருந்ததற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அது இதுவரை நிரூபிக்கப்படவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தனக்கு எதிராக சாட்சி அளிக்குமாறு சிலர் நிர்பந்திக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுரீந்தர் சிங், இதுவரை ஐந்து முறை தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள அவரது மகன், தன்னிடம் பேசும்போது, தனது தந்தை நிர்பந்திக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார் என்றார் டைட்லர்.
Advertisement
சீக்கிய கலவர வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதற்கு அடுத்த நாளே டைட்லர் இக்கருத்தைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் இந்திர காந்தி தனது பாதுகாவலர்களால் 1984-ஆம் ஆண்டு
அக்டோபர் 31ஆம் தேதி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து தில்லியின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. நவம்பர் 1ஆம் தேதி தில்லி குருத்வாராவில் தஞ்சமடைந்திருந்த மூன்று சீக்கியருக்கு எதிராக வன்முறையை டைட்லர் தூண்டியதோடு, அவர்களது மரணத்துக்குக் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு டைட்லர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஜகதீஷ் டைட்லர் அளித்த பேட்டியில் கூறியது:
இந்த கலவர வழக்கில் இதுவரை தனக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடையாது. அத்துடன் எவருமே தன்னிடம் கேள்வியெழுப்பியதில்லை என்றார்.
இந்த வழக்கில் தனது பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு, சுரீந்தர் சிங் மற்றும் ஜஸ்பீர் சிங் ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகளே காரணம். சுரீந்தர் சிங் முதலில் ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிட்டார். பின்னர் எழுத்து மூலமாக அதாவது குர்முகி மொழியில் அறிக்கை அளித்தார். இந்த விஷயத்தில் சுரீந்தர் சிங்குக்கு ஆதரவாக வாதாடும் மூத்த வழக்குரைஞர் ஹெச்.எஸ். ஃபூல்கா, சுரீந்தர் சிங்கிடம் எழுத்து மூலமாக அறிக்கை வாங்கவேண்டியதன் அவசியம் என்ன? என்பது புரியவில்லை என்றார் டைட்லர்.
இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதில் தனக்கு எவ்வித ஆட்சேமும் கிடையாது. ஆனால் 1984ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் சாட்சிகள் எங்கு இருப்பர். அவர்களை எங்கிருந்து விசாரிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை என்றார்.
சுரீந்தர் சிங் பொய் சொல்வதாக அவரது தந்தை கூறுகிறார். இது தொடர்பாக அவர் சிபிஐ-க்கு அளித்த பிரமாண பத்திரத்தை என்னால் காட்டமுடியும். நான் அவர்களுடன் இருந்ததாக சுரீந்தர் பொய் சொல்வதாக அவரது சகோதரரும் கூறுகிறார். குருத்வாரா செயலரும் சுரீந்தர் பொய் சொல்வதாகக் கூறுகிறார்.
இறுதியில் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தான் பொய் சொல்லிவிட்டதாக சுரீந்தர் கூறியுள்ளார் என்று டைட்லர் குறிப்பிட்டார்.
இந்த விஷயத்தில் மீண்டும் முழுவதுமாக விசாரணை நடத்துவதை தான் ஏற்கத் தயார் என்று குறிப்பிட்ட டைட்லர், இந்த வழக்கிலிருந்து தான் முற்றிலுமாக விடுவிக்கப்படும்வரை எந்தவித பொறுப்பான பதவியையும் வகிக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.
தார்மிக அடிப்படையில் தான் வகித்த பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டதாகவும், இதனால் கட்சிக்கோ அல்லது பிரதமருக்கோ எவ்வித தர்மசங்கடமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தான் மிகுந்த கவனத்துடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கிலிருந்து தான் முற்றிலுமாக விடுவிக்கப்படும்வரை எவ்வித பதவியையும் கோரப் போவதில்லை என்றார் டைட்லர்.
இதனாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக செயல்படுவது குறித்து தான் இதுவரை கனவு காணவில்லை என்றும், ஆனால் ஊடகங்கள் தவிர வேறு எவரும் தன் மீது கேள்வியெழுப்பியதில்லை என்றார் டைட்லர்.
இதில் அரசியல் சூழ்ச்சி ஏதேனும் உள்ளதா? என்று கேட்டதற்கு. இந்த விஷயத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பணம் சம்பாதிக்க சிலர் நினைக்கின்றனர். சிரோண்மணி குருத்வாரா பிரந்தக் கமிட்டி மூலம் வழக்குரைஞர் ஃபூல்கா அதிகம் சம்பாதித்துவிட்டார் என்றார் டைட்லர்.