முகப்பு
இந்தியா

கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி வாரியம் அமைக்கக்கூடாது: தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

"கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மே 5-ஆம் தேதி வரை காவிரி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நதி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்கும் நடவடிக்கையை தள்ளி வைக்கவேண்டும்' என்று மத்திய நீர் வளத் துறைக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 2 மே, 2013 at 7:29 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM

"கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மே 5-ஆம் தேதி வரை காவிரி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நதி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்கும் நடவடிக்கையை தள்ளி வைக்கவேண்டும்' என்று மத்திய நீர் வளத் துறைக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நீர் வளத்துறைக்கு கடந்த மாதம் 26-ஆம் தேதி பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியிருந்தது.

"உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.

Advertisement

அந்தத் தீர்ப்பின்படி காவிரி நீர் மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க வேண்டும்.

ஆனால், கர்நாடகத்தில் சட்டப்பேரவை தேர்தல் மே 5-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, இந்த இரு அமைப்புகளை உருவாக்குவது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக ஆகுமா என்பதை பரிசீலிக்க வேண்டும்' அந்த கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், தலைமை தேர்தல் ஆணையத்துக்கு மத்திய நீர் வளத்துறை கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"இந்த இரு அமைப்புகளையும் உருவாக்குவது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாக அமையாது;

2007-ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தவே மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் அது கர்நாடகத்தில் அரசியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பிரச்னையை ஏற்படுத்தும்.

இந்த பிரச்னையை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தி சமுதாயத்தில் ஒரு பிரிவினர் மீது வெறுப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கருதுகிறோம்.

அதனால், இந்த விஷயத்தில் மத்திய நீர் வளத்துறை என்ன நிலையை எடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும்' என்று கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது.

அதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், "கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மே 5-ஆம் தேதி வரை காவிரி தொடர்பான அமைப்புகளை உருவாக்கும் நடவடிக்கையைத் தள்ளி வைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.