முகப்பு
இந்தியா

ஐபிஎஸ் அதிகாரி பாண்டேவின் மனு தள்ளுபடி

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி பி.பி.பாண்டேயின் மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

Updated On : 12 ஜூன், 2013 at 12:43 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி பி.பி.பாண்டேயின் மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

தற்போது தலைமறைவாகவுள்ள பி.பி.பாண்டே, தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். தனக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஞான சுதா மிஸ்ரா, மதன் பி.லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ""இந்த மனுவை நேரடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக முதலில் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும். எனவே, பி.பி.பாண்டேயின் மனுவை நிராகரித்து உத்தரவிடுகிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகர் அருகே இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி அக்பர் அலி ரானா, ஜீஸன் ஜோகார் ஆகியோர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்லத் திட்டமிட்டிருந்தனர் என்றும் உளவுத் துறை தகவல் தெரிவித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இது ஒரு போலி என்கவுன்ட்டர் என்று இஷ்ரத் ஜஹானின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பி.பி.பாண்டே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோது, அவர் காவல் துறை இணை ஆணையராக பதவி வகித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.