முகப்பு
இந்தியா

ஆளில்லா விமானம் மூலம் ஜகந்நாதர் ரத யாத்திரை கண்காணிப்பு

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்ற ஆமதாபாத் ஜகந்நாதர் கோவில் ரத யாத்திரையைக் கண்காணிக்கும் பணியில் முதன்முறையாக ஆளில்லா விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Updated On : 12 ஜூலை 2013, 1:18 am IST
பகிர்:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்ற ஆமதாபாத் ஜகந்நாதர் கோவில் ரத யாத்திரையைக் கண்காணிக்கும் பணியில் முதன்முறையாக ஆளில்லா விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் ஆமதாபாத் நகரின் அனைத்துப் பகுதிகளையும் கண்காணிக்கும்.

ஜமல்பூரில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான ஜகந்நாதர் கோவிலின் 136ஆவது ஆண்டு ரத யாத்திரையை மாநில முதல்வர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

இந்த யாத்திரையை "நேத்ரா' அல்லது "கண்' என அழைக்கப்படும் 2 விமானங்கள் வானத்தில் இருந்தபடி கண்காணிக்கும் என்றும், டிஜிட்டல் புகைப்படம் எடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குஜராத் காவல் துறையின் "வானத்தில் கண்' என்ற இந்த திட்டம், சதி செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், நகரின் பல்வேறு பகுதிகளில் 20 கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக, பிஎஸ்எப் (6), ஆர்ஏஎப் (4), சிஆர்பிஎப் (2) மற்றும் சிஐஎஸ்எப் (2) உள்ளிட்ட 14 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அவற்றைச் செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் அடங்கிய 8 குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கோவில் மரபுப்படி, ஜகந்நாதர் ரத யாத்திரைக்கு முன்னதாக யானைகள் அணிவகுத்துச் செல்லும். இந்த யாத்திரை ஆமதாபாத் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக (14 கி.மீ.) ஊர்வலமாக செல்லும்.

முன்னதாக, ஜகந்நாதரின் பாதங்களை, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சுத்தம் செய்தார். பின்னர், ஜகந்நாதர், பல்தேவ் மற்றும் அவர்களது சகோதரி சுபத்ரா ஆகியோர் எழுந்தருளும் ரதங்கள் ஊர்வலமாக புறப்பட்டன.

கோவிலிலிருந்து ஜகந்நாதர் ரதத்தின் வடத்தைப் பிடித்து இழுத்த மோடி, நாட்டில் அமைதி, சகோதரத்துவம் மற்றும் பொருளாதார வளர்ச்சி எற்பட வேண்டும் என்று நாம் இறைவனை வேண்டிக் கொள்வோம் என்றார்.

ஜகந்நாதரின் கருணையால் பருவமழை தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், ஏழைகள் பயன்பெறும் வகையில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று இறைவனிடம் மோடி வேண்டிக் கொண்டார்.

ஜகந்நாதருக்கு நடத்தப்படும் "பஹிந்த் விதி' எனப்படும் நிகழ்ச்சியில் மோடி 12ஆவது முறையாக பங்கேற்றுள்ளார் என கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.