முகப்பு
இந்தியா

புத்த கயையில் குண்டு வைத்தது 4 நபர்கள்: சுஷீல்குமார் ஷிண்டே தகவல்

புத்த கயை குண்டு வெடிப்பில் மூன்று முதல் நான்கு நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Updated On : 12 ஜூலை, 2013 at 1:20 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM

புத்த கயை குண்டு வெடிப்பில் மூன்று முதல் நான்கு நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மூத்த தலைவர் அம்பிகா சோனி ஆகியோருடன் புத்த கயையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதிகளை சுஷீல்குமார் ஷிண்டே புதன்கிழமை நேரில் பார்வையிட்டார். அதன் பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

புத்தர் பிரானின் புனிதத் தலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளை நாங்கள் கண்டிக்கிறோம். புத்த கயை போன்ற அமைதியான ஒரு பகுதியில் குண்டுகள் வெடித்திருப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். இது குறித்த புலன்விசாரணையில் தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) இரண்டு குழுக்களை ஈடுபடுத்தியுள்ளோம். இது சி.பி.ஐ. விசாரணைக்கு இணையானது.

Advertisement

என்.ஐ.ஏ. இப்போது இந்த குண்டு வெடிப்புகளில் பயங்கரவாதிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருகிறது. புலன்விசாரணை தொடங்கப்பட்டு, பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. பிகார் அரசின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த வழக்கின் முழு விசாரணையையும் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்துள்ளோம்.

குண்டு வெடித்த பகுதிகள் அனைத்தையும் நாங்கள் பார்வையிட்டோம். வைக்கப்பட்ட 13 குண்டுகளில் 10 குண்டுகள் வெடித்திருந்தன. 3 குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. இந்த குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவதற்காக 2-3 கிலோ எடை கொண்ட சிறிய காஸ் சிலிண்டர்களும் ஆணிகள் மற்றும் பால் பேரிங்குகள் ஆகியவை நிரப்பப்பட்டு அவை டெட்டனேட்டர்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. குண்டுகளைக் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கச் செய்வதற்காக ஒரு கடிகாரமும் வைக்கப்பட்டிருந்தது. அனைத்து குண்டுகளும் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வெடித்தன.

இது தொடர்பாக நாங்கள் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறோம். குண்டு வெடிப்புகளில் மூன்று முதல் நான்கு நபர்கள் ஈடுபட்டிருக்கலாம். அவர்கள் ஒரு காரில் வந்துள்ளனர். விரிவான விசாரணை நடந்து வருகிறது. இதுவரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படாதது குறித்துக் கேட்கிறீர்கள். யாரையும் அவசரத்தில் கைது செய்வது சரியல்ல. புலன்விசாரணை விரிவான முறையில் நடைபெற்று, உண்மையான குற்றவாளிகள் பிடிபட வேண்டும்.

குண்டு வெடிப்பு நடக்கப் போவது குறித்து உரிய தகவல் கிடைத்தும் உளவு ரீதியிலான தோல்வி குறித்து கேட்கிறீர்கள். தங்களுக்குக் கிடைத்த தகவலை தில்லி போலீஸôர், பிகார் போலீஸôருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அளித்தனர். இம்மாதம் 3ஆம் தேதி புத்த கயையில் பாதுகாப்பு நிலவரம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் காவல்துறை டி.ஐ.ஜி. ஒருவர் பரிசீலனை நடத்தினார். போலீஸôருக்கு முன்கூட்டியே கிடைத்த தகவல் குறித்த விவரங்களை நான் கேட்டுள்ளேன்.

இந்த குண்டு வெடிப்பில் நக்சலைட்டுகளுக்கு தொடர்பு இருக்குமா? என்பதைப் பொறுத்தவரை, நாட்டில் பல்வேறு சிக்கலான பிரச்னைகள் உள்ளன. மற்ற நாடுகளில் இருந்து நம் நாட்டுக்குள் ஊடுருவல் நடக்கிறது. நக்சலைட்டுகள் உள்ளனர். உள்நாட்டு மதப் பதற்றங்களும் உள்ளன. நாங்கள் அனைத்துக் கோணங்களிலும் பார்க்க வேண்டியுள்ளது என்றார் ஷிண்டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.