முகப்பு
இந்தியா

தெலங்கானாவுக்கு எதிர்ப்பு: ராயலசீமா, கடலோர ஆந்திரத்தில் போராட்டம் தொடர்கிறது

தெலங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை போராட்டம், உண்ணாவிரதம் நடைபெற்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Updated On : 2 ஆகஸ்ட் 2013, 12:50 am IST
பகிர்:

தெலங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை போராட்டம், உண்ணாவிரதம் நடைபெற்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், கடப்பா மற்றும் அனந்தப்பூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தெலங்கானா எதிர்ப்புக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை.

3-வது நாளாக உண்ணாவிரதம்: விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் 3-வது நாளாக வியாழக்கிழமை நீடித்தது. விசாகப்பட்டினம் உள்பட மற்ற மாவட்டங்களில் நீதிமன்றத்தை 72 மணி நேரம் புறக்கணிக்க வழக்குரைஞர்கள் முடிவு செய்ததால், வியாழக்கிழமை நீதிமன்றங்களில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நீதிமன்றங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

Advertisement

Advertisement

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை முதல் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், அவை தாக்கப்படவில்லை என்றும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அரசின் உயர் அதிகாரிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

மனிதச் சங்கிலி போராட்டம்: விஜயவாடாவில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை வலியுறுத்தும் அமைப்பின் (ஜே.ஏ.சி.) தலைவர் தேவினேனி அவிநாத் தலைமையில் நடந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் அமைச்சர் வேட சோபனாதிரேஸ்வரராவ், எம்.எல்.ஏ. தேவினேனி உமாமகேஷ்வரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் சாலையில் கூடி அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.

பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுடன், சித்தார்த்தா பெண்கள் கல்லூரியின் விரிவுரையாளர்களும், இப்ராகிம்பட்டினத்தில் உள்ள அனல்மின் நிலைய ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

எம்.பி. ராஜாகோபால் வீட்டை முற்றுகையிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், பதவியை ராஜிநாமா செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.

கிருஷ்ணா மாவட்டத்தில் திருவூர், ஜக்கையாபேட்டை, நுசிவீத் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், விஜயவாடா- ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அமைதி நிலவுகிறது: காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அனந்தபூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நிகழ்ந்த ஒருசில வன்முறை சம்பவங்களைத் தவிர ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாகவும், இந்த இடங்களில் பெரும்பாலும் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் போராட்டங்களும், பேரணிகளும் மட்டுமே நடைபெற்றன' என்றார்.

போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் கட்டுப்பாடு அவசியம்: ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் போராட்டக்காரர்களை ஒடுக்கும்விஷயத்தில் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் கிரண்குமார் ரெட்டி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் பி.கே. மொஹந்தி, காவல் துறைத் தலைவர் வி. தினேஷ் ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது முதல்வர் பேசுகையில், "தேசியத் தலைவர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் சிலைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பகுதிகளில் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். சிலைகளுக்கு தீ வைப்பது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எச்சரிக்கை விடுத்தார்.

"போராட்டக்காரர்களை ஒடுக்கும் விஷயத்தில் போலீஸார் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.