ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: எழுத்துப்பூர்வமாக வாதிட அன்பழகன் தரப்புக்கு அனுமதி
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தரப்பு வழக்குரைஞர்கள் எழுத்துப்பூர்வமாக மட்டுமே வாதிட நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா அனுமதி அளித்தார்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தரப்பு வழக்குரைஞர்கள் எழுத்துப்பூர்வமாக மட்டுமே வாதிட நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா அனுமதி அளித்தார்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில், அரசுத் தரப்புடன் சேர்ந்து வாதிட தங்கள் தரப்பு வழக்குரைஞர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று, திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தாக்கல் செய்திருந்த மனு மீது நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா தரப்பு வழக்குரைஞர்களின் வாதம் தற்போது நடந்து வருகிறது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் பவானி சிங் ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் வாதாட உள்ளார்.
Advertisement
இவர் அண்மையில் பொறுப்பேற்று இருப்பதால், அவருக்கு உதவும் வகையில் வாதிட தங்கள் தரப்பு வழக்குரைஞர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று, திமுக பொதுச் செயலர் அன்பழகன் சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அன்பழகன் சார்பில், வழக்குரைஞர் ஏ.கே.சுப்பையா வாதாடினார். இதையடுத்து, புதன்கிழமை நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா பிறப்பித்த உத்தரவு:
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 301 பிரிவு 2-இன் படி, இந்த வழக்கில் அரசுத் தரப்பு சார்பில், அன்பழகனின் வழக்குரைஞர்கள் எழுத்துப்பூர்வமாக வாதிடவும், அரசுத் தரப்பு வழக்குரைஞர் விரும்பினால், வழக்கில் வாதிட அன்பழகனின் வழக்குரைஞர்கள் அவருக்கு உதவி செய்யவும் அனுமதி வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.