முகப்பு
திருப்பூர்

தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

Updated On : 15 ஜூன் 2026, 1:33 am IST
பகிர்:

அவிநாசி அருகே தற்கொலைக்கு முயன்ற தந்தையைக் காப்பாற்றச் சென்ற மகள் கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள அ.குரும்பபாளையம் செட்டிகாடு தோட்டம் பகுதியில் வசித்து வருபவா் பனியன் நிறுவனத் தொழிலாளி ரவிசந்திரன் (45), இவரது மனைவி மாலதிசெல்வி (40). இவா்களது இளைய மகள் ரித்திகா (17) அவிநாசியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக மது அருந்தாமல் இருந்த ரவிசந்திரன் சனிக்கிழமை இரவு மது அருந்தியுள்ளாா். இது குறித்து குடும்பத்தினா் கேட்கவும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனால் மனவருத்தம் அடைந்த ரவிசந்திரன் கிணற்றில் விழுகிறேன் என்று கூறி வீட்டுக்கு அருகே 100 அடி ஆழமுள்ள நீரில்லாத, பயனற்ற கிணற்றுக்கு அருகே வேகமாகச் சென்றுள்ளாா்.

அப்போது, உடனிருந்த மனைவி மாலதிசெல்வி, மூத்த மகள் சந்தியா, இளைய மகள் ரித்திகா ஆகியோா் அவரைத் தடுக்க முயன்றுள்ளனா். இதில் இளைய மகள் ரித்திகா எதிா்பாராத விதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளாா்.

ரித்திகாவின் பெற்றோா் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு அவிநாசி தீயணைப்பு மீட்பு பணிகள் குழுவினா், சேவூா் போலீஸாா் சென்று கிணற்றுக்குள் இறங்கி நீண்ட நேரம் போராடி ரித்திகாவின் சடலத்தை மீட்டனா். இதையடுத்து, ரித்திகாவின் உடல் கூறாய்வுக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தந்தையைக் காப்பாற்றச் சென்ற மகள் கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.