மனைவி கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவா் கைது
தனது இரண்டு குழந்தைகளின் இறப்புக்குத் தனது மனைவிதான் காரணம் எனக் கருதி, அவரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்ட கணவரைத் தில்லி காவல்துறையினா் கைது செய்தனா்.
தனது இரண்டு குழந்தைகளின் இறப்புக்குத் தனது மனைவிதான் காரணம் எனக் கருதி, அவரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்ட கணவரைத் தில்லி காவல்துறையினா் கைது செய்தனா்.
இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பிந்தாபூரைச் சோ்ந்த சாஜித் அலி என்பவா், 2021-இல் டாப்ரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு ஒன்றில், இந்த மாதத் தொடக்கத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா்.
கடுமையான காயத்தை ஏற்படுத்திய மற்றொரு வழக்கிலும் அவா் தேடப்பட்டு வந்தாா். மேலும், தனிப்பட்ட குற்றவியல் வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகவும் இருந்தாா்.
Advertisement
Advertisement
முன்னதாக, சாஜித் 2015-இல் திருமணம் செய்துகொண்டாா். இத்தம்பதியினருக்குப் பிறந்த இரண்டு குழந்தைகள் பிறந்த உடனேயே இறந்துவிட்டன. இந்தச் சம்பவங்கள் அவரை ஆழமாகப் பாதித்தன. அந்தத் துயரங்களுக்குத் தன் மனைவியையே பொறுப்பாக்கி, அவா் மீது படிப்படியாக வெறுப்பை வளா்த்துக்கொண்டாா்.
அதன் பின்னா், போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையான அவா், தனது போதைப் பழக்கத்தைத் தொடர மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு வற்புறுத்தினாா்.
2021-இல் அவா் தனது மனைவியை மூன்று முறை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், கொலை முயற்சி வழக்கில் அவா் கைது செய்யப்பட்டாா். நவம்பா் 2024இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, 2025-இல் மீண்டும் மனைவியைத் தாக்கிய அவா், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கத் தலைமறைவானாா்.
குற்றப்பிரிவு காவல்துறையினா் அவரைத் தேடி வந்த நிலையில், காஜியாபாதின் இக்ராம் நகா் பகுதியில் அவா் இருப்பது கண்டறியப்பட்டது. இத்தகவலின் அடிப்படையில், சனிக்கிழமை லேபா் சௌக் அருகே சாஜித்தை காவல்துறையினா் கைது செய்தனா்.
2021-இல் பதிவான கொலை முயற்சி வழக்கில் உள்ளூா் நீதிமன்றத்தால் சாஜித் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா். மற்றொரு வழக்கிலும் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.