5 ராணுவ அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு
இத்தாலி நிறுவனத்தில் இருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக 5 ராணுவ உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
இத்தாலி நிறுவனத்தில் இருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக 5 ராணுவ உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
வி.ஐ.பி.க்களின் பயணத்துக்காக, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த 12 அதிநவீன சொகுசு ஹெலிகாப்டர்களை இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது. இதில், ரூ.340 கோடி வரை ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அகஸ்டா வெஸ்ட் நிறுவனத்திடம் இருந்து முதல்கட்டமாக 2 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இந்த ஹெலிகாப்டர்களைப் பரிசோதனை செய்த 5 ராணுவ அதிகாரிகள், அதுதொடர்பான அறிக்கையை ராணுவ அமைச்சகத்திடம் சமர்ப்பித்தனர். இவை நல்ல நிலையில் இருப்பதாக அறிக்கை அளிப்பதற்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ராணுவ அதிகாரிகள் 5 மில்லியன் அமெரிக்க டாலரை லஞ்சம் கேட்டதாக இத்தாலி அரசு குற்றம் சாட்டியது. இதுதொடர்பான ஆவணங்களை அந் நாட்டு அரசு, சிபிஐ அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டது. தற்போது இந்த ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தும் சி.பி.ஐ. அதிகாரிகள், ஹெலிகாப்டரை பரிசோதனை செய்த பிரிகேடியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி உள்பட 5 ராணுவ உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
Advertisement
இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான விதிமுறைகள் குறித்து ஆராய்ந்ததில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு ஆதரவாக சில முடிவுகள் இந்திய ராணுவத் தரப்பில் எடுக்கப்பட்டதும், இதில் 5 ராணுவ உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்த உள்ளோம். அதைத் தொடர்ந்து, அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றனர்.