ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ராசியில்லாத ரயில்வே, சட்ட அமைச்சகங்கள்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ராசி இல்லாத அமைச்சகங்களாக ரயில்வே மற்றும் சட்டத்துறை அமைச்சகங்கள் கருதப்படுகின்றன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ராசி இல்லாத அமைச்சகங்களாக ரயில்வே மற்றும் சட்டத்துறை அமைச்சகங்கள் கருதப்படுகின்றன.
கடந்த 4 ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இவ்விரு அமைச்சகங்களிலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எந்த அமைச்சரும் பதவியில் நீடிக்கவில்லை.
முறைகேடு புகார்களால் வெள்ளிக்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்ட பவன்குமார் பன்சால் மற்றும் அஸ்வனி குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் தத்தம் துறைகளில் பதவி ஏற்றிருந்தனர்.
Advertisement
Advertisement
ரயில்வேயில் 4 ஆண்டுகளில் 4 அமைச்சர்கள்: ரயில்வே துறையில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் 4 அமைச்சர்கள் பதவி ஏற்று, பின்னர் வெவ்வேறு காரணங்களுக்காக பதவி விலகினர்.
இவர்களில் தினேஷ் திரிவேதி, பன்சால் ஆகியோர் கடும் நெருக்கடியான நேரத்தில் பதவி விலக நேர்ந்தது.
கடந்த 2009-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபோது மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக பதவி ஏற்றார். இரண்டு ஆண்டுகள் கழித்து மேற்கு வங்க முதல்வர் பொறுப்பை ஏற்பதற்காக பதவியை விட்டு அவர் விலகினார்.
அவரது கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றார்.
எனினும் ரயில் பயணக்கட்டண உயர்வு பிரச்னை தொடர்பாக அவரை பதவியில் இருந்து கட்டாயமாக விலக வேண்டும் என மம்தா பானர்ஜி நிர்பந்தித்தார்.
ரயில்வே பட்ஜெட் நிறைவேற்றப்படுவதை காணாமலேயே தினேஷ் திரிவேதி பதவியை இழந்தார்.
பின்னர் மம்தாவின் தீவிர ஆதரவாளரான முகுல்ராய் ரயில்வே அமைச்சராக பதவி ஏற்றார்.
ஆனால் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை எதிர்த்து அரசுக்கான ஆதரவை மம்தா பானர்ஜி விலக்கிக் கொண்டார். இதனால் 6 மாதங்களே பதவி வகித்த முகுல்ராய் பதவியை விட்டு விலக நேர்ந்தது.
கடந்த 17 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் வசம் ரயில்வே அமைச்சகம் சென்றது. அக்கட்சியின் பவன்குமார் பன்சால் ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் தற்போது லஞ்ச புகார் காரணமாக அவரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சட்ட அமைச்சகத்திலும் இதே நிலை: சட்ட அமைச்சகத்திலும் ஏறக்குறைய இதே நிலை தான் நீடித்தது. கடந்த 2009-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்றபோது சட்ட அமைச்சராக வீரப்பமொய்லி நியமிக்கப்பட்டார். ஆனால் 2011-ம் ஆண்டு அவர் கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.
சட்டத்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வேண்டாத சக்திகள் தன்னை பதவியில் இருந்து மாற்ற சதி செய்தன என மொய்லி கூறினார்.
அவருக்கு பின் சல்மான் குர்ஷித் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். எனினும் அவரது மனைவி லூயிஸால் நடத்தப்படும் ஜாகீர் ஹுசேன் அறக்கட்டளை சார்பில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதனால் அவர் சட்ட அமைச்சகத்தில் இருந்து வெளியுறவுத் துறைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஸ்வனி குமார் மத்திய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையை திருத்தியது தொடர்பாக எழுந்த புகாரால் தற்போது அஸ்வனி குமார் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.