தில்லியில் வாகனக் கட்டுப்பாடு விதி வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், இந்த கட்டுப்பாடு பெண்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
தில்லியில் காற்று மாசுபாட்டைத் தடுக்கும் நோக்கில், ஒற்றைப் படை, இரட்டைப் படை பதிவெண் கொண்ட தனியார் வாகனங்களை மாற்று நாள்களில் இயங்க அனுமதிக்கும் திட்டத்தை, வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்த ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.
இந்த கட்டுப்பாட்டுக்கு, பெண் ஓட்டுநர்கள் அல்லது 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் செல்லும் பெண் ஓட்டுநர்களுக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் இந்த ஒற்றைப்படை, மற்றும் இரட்டைப் படை வாகன எண்கள் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கேஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.
மேலும், இவர்களைத் தவிர்த்து, வாகனக் கட்டுப்பாட்டை மீறுவோருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல, குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தலைவர்களின் வாகனங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலங்களவை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள், தில்லியைத் தவிர்த்து பிற மாநில முதல்வர்களுக்கும், உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற, மக்கள் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் வாகன கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவைத் துணைத் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய இணை அமைச்சர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவமனைக்குச் செல்வோர் தகுந்த ஆதாரங்களை வைத்திருப்பின் அவர்களது வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்படும். அதே போல, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், சிறைத்துறை வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.