அகில இந்திய ஊழியர் கூட்டமைப்பு சார்பில் நாளை நடைபெறும் தர்னா போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்கள், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏழாவது ஊதியக் குழு அறிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், 50 சத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தீர்மானித்துள்ளது. அதற்கு முன்னதாக புதுதில்லியில் உள்ள ஜந்தர் மாந்தர் மற்றும் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அருகே நவம்பர் 19 ஆம் தேதி தர்னா போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசின் மத்திய பணியாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும். அப்படி வராத ஊழியர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ஊதியமும் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்துப் பணியாளர்களும் பணிக்கு வருவதை அதிகாரிகள் உறுதி செய்வதோடு, நாளை யாருக்கும் விடுமுறை அளிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அரசு ஊழியர்கள் யாரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதற்கு அதிகாரம் இல்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளும் இதை உறுதி செய்துள்ளன. அரசு ஊழியர்கள் தங்கள் குறைகளை ஏற்கெனவே இயங்கி வரும் கூட்டு ஆலோசனைக் குழு (Joing Consulative Machineray) தெரிவிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.