கேரள மாநிலத்தை தொடர்ந்து ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலை நடத்துகின்றன என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
உலகில் கம்யூனிசம் வழக்கொழிந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி அநேக மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. இந்த இரு கட்சிகளும் கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவாது. பாரதீய ஜனதா கட்சி மட்டுமே கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்றார்.
இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆட்சி மாற்றத்தை கேரள மக்கள் ஏற்படுத்துவார்கள் என நம்புவதாக இன்று கோட்டயத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கூறினார் அமித் ஷா.
கேரளத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆட்சிகளில் வன்முறையும், ஊழலும்தான் அதிகரித்துள்ளன.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முடியும். பாஜக ஆட்சியில் அனைவரும் சமமாக நடத்தப்படுவர்.
கேரளத்தை முன்னேற்ற பாஜக விரும்புகிறது. ரப்பர் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். இதற்கு ஆட்சியில் மாற்றம் ஏற்பட வேண்டும்
கேரளத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்ளும் காங்கிரஸும் கம்யூனிஸ்டும், மேற்கு வங்கத்தில் இணைந்து செயல்படுகின்றனர் என்றார் அமித் ஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.